சமூகத்தில் உள்ள தடைகளைத் தாண்டி, திருநங்கைகள் பல துறைகளில் சாதித்து வருகின்றனர். அந்த வகையில், கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பத்ம லட்சுமி.
கேரளாவின் பார் கவுன்சிலில் மார்ச் 19 ஞாயிற்றுக் கிழமையன்று, சுமார் 1500க்கும் மேற்பட்ட சட்ட பட்டதாரிகள் பதிவு செய்தனர். அவர்களில் பத்ம லட்சுமியும் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். இவர் எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
இவருக்கு, பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வரும் நிலையில், கேரள மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் பி. ராஜிவ், பத்ம லட்சுமியின் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்தியுள்ளார்.
அதில், “வாழ்க்கையின் அனைத்து தடைகளையும் கடந்து கேரளாவில் முதல் திருநங்கை வழக்கறிஞராகி இருக்கும் பத்ம லட்சுமிக்கு வாழ்த்துக்கள். வரலாற்றில் முதலாவதாக வருவதே கடினமான சாதனை. இலக்கை நோக்கிச் செல்லும் பாதையில், முன்னே யாரும் இல்லை. தடைகளும் தவிர்க்க முடியாததாக இருக்கும். நம்மை அமைதியாக்கவும், தாழ்மைப்படுத்தவும் ஆட்கள் இருப்பார்கள்.
இதையெல்லாம் முறியடித்து சட்ட வரலாற்றில் பத்மலட்சுமி தனது பெயரை எழுதி உள்ளார். நீதிக்கான போராட்டத்தில் எந்தப் பக்கம் நிற்க வேண்டும் என்பதை பத்ம லட்சுமியின் பாதைகள் நம்பவைத்துள்ளன. அதனால் முன்னோக்கிய பயணத்தில் பத்ம லட்சுமியின் வார்த்தைகள் மறுக்கப்பட்ட நீதியின் குரலாகச் மாறவேண்டும்.
பத்ம லட்சுமியின் வாழ்க்கை, திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த மேலும் பலரை சட்டத்துறைக்கு வர ஊக்குவிக்கட்டும். பதிவு செய்த 1528 வழக்கறிஞர்கள் மற்றும் பத்ம லட்சுமிக்கு வாழ்த்துகள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
வெல்கம் பத்ம லெட்சுமி!