இலங்கை வடக்கு பருத்தித்துறை பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் வடக்கு கடற்தொழிலாளர்களுடன் இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதில் மீனவர்கள் தங்கள் மீன்பிடி பிரச்னைகள் குறித்து அமைச்சரிடம் தெரிவித்தனர். அப்போது, “இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் தடைசெய்யப்பட்ட விசைப்படகுகளைக் கொண்டு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து, நாங்கள் ஓராண்டு பிடிக்கும் மீன்களை… ஒரே நாளில் மீன் குஞ்சுகள் முதற்கொண்டு அரித்து எடுத்துச் சென்று விடுகின்றனர். இதனால் இலங்கை மீனவர்களுக்கு சொற்ப அளவில்கூட மீன்கள் கிடைப்பதில்லை. எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து, அவர்கள் கைதுசெய்யப்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் எல்லையைக் கடந்து மீன் பிடிப்பதை தொடர்கதையாக வைத்திருக்கின்றனர்.
எனவே எல்லை தாண்டி இந்திய மீனவர்கள் வராமல் இருப்பதற்கு அவர்கள்மீது இலங்கை அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என இலங்கை மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து இலங்கை செய்தியாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம்கூட மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி கிடையாது. இலங்கை நாடாளுமன்றத்தில் இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு டோக்கன்கள் வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. ஆனால் டோக்கன் வழங்கினால் மொத்த கடல் வளத்தையும் இந்திய மீனவர்கள் அழித்துவிடுவார்கள் என இலங்கை மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தத் திட்டமும் செயல்படுத்த வாய்ப்பில்லை.
இது குறித்து இந்திய அரசுக்கு அரசாங்கரீதியாகவும், நட்பின்ரீதியாகவும் இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இனி இந்தியக் கடல் எல்லையில் படகுகளில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தித்தான் எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
இலங்கையிலிருந்து நூற்றுக்கணக்கான சிறிய படகுகளில் சென்று… இந்திய மீனவர்கள் இந்தப் பகுதிக்குள் வரும்போது கடலிலேயே மறித்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் எனவும் கூறியிருக்கிறேன்.
ஏனென்றால் இலங்கை கடற்படை நடவடிக்கை எடுக்கும்போது, இந்திய தரப்பில் வேறுவிதமாக சித்திரிக்கப்படுகிறது. `தொழில் செய்கிறபோது சிங்கள கடற்கரையினர் தாக்குகிறார்கள்… கைதுசெய்கிறார்கள்’ என இந்திய மீனவர்கள் கூறும்போது, தவறான செய்தி பரவுகிறது. ஆகவே சக மீனவர்கள் படகுகளில் சென்று அந்த இடத்தில் வைத்து ஆர்ப்பாட்டம் செய்கின்றபோது, மக்களுக்கு உண்மை நிலை புரியும்.
இந்திய ஊடகவியலாளர்களும், இலங்கை ஊடகவியலாளர்களும் நேரில் வந்து செய்திகளைச் சேகரித்து நிலைமையை அவதானித்துச் செல்லட்டும். அப்போதுதான் இந்தியாவிலுள்ள மக்களுக்கு இலங்கையின் நிலவரம் புரியும். மேலும் இலங்கை ஜனாதிபதி டெல்லிக்குச் சென்று, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவிருக்கிறார்” என்றார்.