கரூர் மாவட்டம், புலியூர் அருகேயுள்ள உப்பிடமங்கலம் பகுதியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி ஒருவர், அந்தப் பகுதியிலுள்ள ஸ்டேஷனரி கடையில் இன்று காலை பென்சில் வாங்கச் சென்றிருக்கிறார். அப்போது, அந்த ஸ்டேஷனரி கடையை நடத்திவரும் நடராஜன் என்பவர், சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், அதிர்ச்சியான அந்த சிறுமி, அங்கிருந்து தப்பியோடி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.
சிறுமி சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆவேசமாகச் சென்று, நடராஜன் நடத்தி வரும் ஸ்டேஷனரி கடையை அடித்து நொறுக்கினர். அதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த வெள்ளியணை காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகச் சொல்லப்படும் நடராஜனை, வெள்ளியணை காவல் நிலைய போலீஸார், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஸ்டேஷனரி கடை நடத்திவரும் நபர் சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.