தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்றுவருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13,917 மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளையும், 13,114 மாணவர்கள் பதினோராம் வகுப்புத் தேர்வுகளையும் எழுதிவருகிறார்கள். தேர்வு எழுதவரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அனுமதியுடன் ஒருவர் தேர்வு எழுத, உதவிசெய்வது வழக்கமான நடைமுறை.

ஆசிரியர் ஜெகன்நாத்

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் தேர்வு எழுத வந்திருக்கிறார். அந்த மாணவிக்குத் தனியறை ஒதுக்கப்பட்டு, ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த தனியார்ப் பள்ளி ஆசிரியர் ஜெகன்நாத் உதவியுடன் மாணவி தேர்வு எழுதிக்கொண்டிருந்தார். இந்த நிலையில், தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவி, பள்ளி வாசலிலிருந்த கடையிலிருந்து தன்னுடைய தந்தையின் செல்போனுக்கு போன் செய்து அழுதுகொண்டே சீக்கிரம் வரும்படி சொல்லியிருக்கிறார்.

உடனடியாக அங்கு விரைந்து சென்ற மாணவியின் தந்தையிடம், அந்த மாணவி ஆசிரியர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, இந்தச் சம்பவம் குறித்து பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார், விசாரணை நடத்தியதில் ஆசிரியர் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையம்

அதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தனியார்ப் பள்ளி ஆசிரியர் ஜெகன்நாத்தை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர். தேர்வெழுதவந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.