இலங்கை, திரிகோணமலையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கடந்த வாரம் இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் இலங்கை அகதிகள் முகாமுக்கு வந்திருக்கிறார். அங்கு முகாம் பாதுகாப்பு அதிகாரிகளிடம், “கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் என்னிடமும், என்னைப் போன்று 12 பேரிடமும் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.72 லட்சத்தை ஏமாற்றி வாங்கிக்கொண்டு, இந்தியாவுக்கு கள்ளப்படகு மூலம் தப்பி வந்துவிட்டார்.

அவர்மீது திருகோணமலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். இந்த நிலையில், ஜனார்த்தனன் மண்டபம் முகாமில் தங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டு இங்கு வந்திருக்கிறோம். அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியிருக்கிறார். இது குறித்து மண்டபம் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு முகாம் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதையடுத்து மண்டபம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் புகார் மனு அளித்தார்.

முகாமில் தங்கியிருக்கும் மோசடி நபரின் படத்துடன் ஆட்சியரிடம் புகாரளித்த ஜெயக்குமார்

இது குறித்து நம்மிடம் பேசிய ஜெயக்குமார், “இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் எங்களால் வாழ வழி இல்லாமல் அண்டை நாடுகளுக்குச் செல்வதற்கு முயன்றுவந்தோம். இது குறித்து திருகோணமலையைச் சேர்ந்த ஜனார்த்தனனிடம் யதேச்சையாகத் தெரிவித்தேன். அப்போது ஜெர்மன் நாட்டுக்குக் கப்பலில் அனுப்பி வைக்க, தான் ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு ஆறு லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் கூறினார். அதை நம்பி என்னுடைய விவசாய நிலம், வீடு, நகை, வாகனம் ஆகியவற்றை விற்று பணம் கொடுத்தேன்.

ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட மூன்று நாள்கள் கழித்து, ஜனார்த்தனனைக் குடும்பத்துடன் காணவில்லை. அப்போதுதான் என்னைப் போன்று 12 பேரிடம் இதேபோல் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி, ஆறு லட்சம் ரூபாய் வீதம் 72 லட்சத்தை அவர் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. ஏமாற்றப்பட்ட நாங்கள் அனைவரும் ஜனார்த்தனன்மீது திருகோணமலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம்.

இந்த நிலையில்தான், ஜனார்த்தனன் குடும்பத்துடன் கள்ளப்படகு மூலம் ராமேஸ்வரத்துக்கு வந்து, மண்டபம் முகாமில் குடும்பத்துடன் அகதியாகத் தஞ்சமடைந்திருப்பது பற்றி தமிழக ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்டோம். இது குறித்து திருகோணமலை காவல் நிலையத்தில் தெரிவித்தோம்.

அவர்கள் ஜனார்த்தனனை இங்கு அழைத்து வந்தால், அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தி, பணத்தை மீட்டுக் கொடுப்பதாகக் கூறினர்.

அதற்காகப் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் ஒன்று சேர்ந்து, கடன் வாங்கி என்னிடம் கொடுத்து, ஜனார்த்தனனை இலங்கைக்கு அழைத்து வருமாறு அனுப்பிவைத்தனர். மண்டபம் முகாமுக்குச் சென்றால், போலீஸில் புகார் அளிக்குமாறு கூறினர்.

போலீஸில் ஜனார்த்தனன் பணம் வாங்கிய வீடியோ, இலங்கை திரிகோணமலை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் ஆகியவற்றைக் காண்பித்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திவந்தனர்.

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம்

இதன் காரணமாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்திருக்கிறேன். ஜனார்த்தனனால் அங்கு 12 குடும்பங்கள் இருக்க இடம், உண்ண உணவுகூட இல்லாமல் ஒவ்வொரு நாளும் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்திவருகிறோம். தயவுசெய்து இந்திய அரசு ஜனார்த்தனனை இலங்கைக்கு அனுப்பிவைத்து எங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க உதவி செய்ய வேண்டும்” என்று கண்ணீர்மல்கக் கூறினார்.

இவரின் மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.