டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கடந்த ஆண்டு, ராம நவமி, அனுமன் ஜெயந்தி போன்ற இந்து பண்டிகைகளின்போது, பல இடங்களில் இந்து, முஸ்லிம் குழுக்களிடையே கலவரங்கள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக, மசூதிகளிலிருந்து ஒலிபெருக்கிகளை அகற்றவேண்டும் என இந்து அமைப்புகளும், பா.ஜ.க-வினரும் குரலெழுப்பினர். மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன.
இந்த நிலையில் கர்நாடக மாநில பா.ஜ.க முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, மசூதி ஒலிபெருக்கியைக் குறிப்பிட்டு அல்லாஹ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.
கே.எஸ்.ஈஸ்வரப்பா, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், “நான் எங்கு சென்றாலும், இந்த அஸான் (மசூதிகளில் ஒலிக்கும் தொழுகை அழைப்பு) எனக்கு பெரும் தலைவலியைக் கொடுக்கிறது. உச்ச நீதிமன்றத்திலிருந்து தீர்ப்பு வரவிருக்கிறது. இன்றைக்கு இல்லாவிட்டாலும், என்றைக்காவது ஒருநாள் அஸானுக்கு முடிவு வரும்.
கோயில்களில், சிறுமிகளும், பெண்களும் பிரார்த்தனைகள், பஜனைகள் செய்கிறார்கள். நாங்கள் மதவாதிகள்தான். ஆனால், நாங்கள் ஒன்றும் இப்படி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதில்லை. ஒலிபெருக்கிகளைக் கொண்டுதான், தொழுகைக்கு நீங்கள் அழைப்பு விடுக்கவேண்டும் என்றால், அல்லாஹ் காதுகேளாதவர் என்று அர்த்தம்” என்று கூறினார்.