புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மர்ம நபர்களால் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்களைக் கடந்தும் இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இதற்கிடையே, இதுதொடர்பான, புகார் மனுவினை, அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் தான், இந்த வழக்கு குறித்தும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் 4 வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட எஸ்.பி-க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரங்களை 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்கக்கோரி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே ஆகியோருக்குப் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் விளக்கம் கேட்டு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.