மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது.
இக்கோயில் காசிக்கு இணையான 6 கோயில்களில் முதன்மையான திருக்கோயிலாகவும், சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் கொண்ட அகோரமூா்த்தியாக சிவபெருமான் தனிச் சந்நிதியில் அருள்பாலித்து வருவது சிறப்புக்குரியதாகும்.
மேலும், நவகிரக ஸ்தலங்களில் கல்வி, தொழில் ஆகியவற்றின் அதிபதியான புதன் பகவானுக்குரிய ஸ்தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் இந்திர பெருவிழா 13 நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு இந்திர பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடிமரத்துக்குப் பால், பன்னீர், மஞ்சள்,சந்தனம்,திரவியம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கொடிமரத்தில் திருக் கொடியேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்த சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா 12 -ம் தேதியும், தெப்பத்திருவிழா 15 -ம் தேதி அன்றும் நடைபெற உள்ளது.