பெரு நாட்டைச் சேர்ந்தவர் ஜூலியோ சீசர் பெர்மேஜோ என்ற 26 வயது இளைஞர். இவர் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்துவந்தார். இவர் பூங்காவில் தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தார். போலீஸாருக்கு அவர் மம்மி வைத்திருப்பது தொடர்பாகத் தகவல் சென்றிருக்கிறது. அப்போது அங்கு வந்த போலீஸார், ஜூலியோ சீசர் பெர்மேஜோ வைத்திருந்த உணவு டெலிவரி பையைத் திறந்து பார்த்தனர்.
அதில் மம்மி உடல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். காவல்துறை அதிகாரிகள், அந்தப் பையைக் கைப்பற்றி விசாரித்தபோது, ஜூலியோ சீசர் பெர்மேஜோ என்ற 26 வயது இளைஞர் அந்த மம்மியைச் சொந்தம் கொண்டாடியிருக்கிறார். அது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தியபோது, “அந்த மம்மி என் ஆன்மிகக் காதலி. அவளுக்கு `ஜுவானிடா’ என்று பெயர் வைத்திருக்கிறேன். அவள் எப்போதும் என் அறையில்தான் இருக்கிறாள். அவள் என்னுடன் உறங்குகிறாள், நான் அவளை கவனித்துக்கொள்கிறேன்.
30 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை இந்த மம்மியை வீட்டுக்குக் கொண்டு வந்தார்” எனத் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, காவல்துறை ஜூலியோ சீசர் பெர்மேஜோவை கைதுசெய்து விசாரித்துவருகிறது. பெருநாட்டின் மத்திய கடற்கரைப் பகுதியான லீமா பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த மம்மிகள் குறித்து அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இது 600 முதல் 800 ஆண்டுகள் பழைமையான மம்மி எனக் கூறப்படுகிறது.