திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் சாக்சீடு குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற, கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தக் காப்பகத்தில் மொத்தம் 32 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்றிலிருந்து காப்பகத்தில் இருந்த 11 குழந்தைகளுக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து இரவு மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருக்கிறது. அதனையடுத்து குழந்தைகள் காப்பக நிர்வாகிகள் உடனடியாக குழந்தைகளை ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட 11 குழந்தைகளும் ஒரு வயது கூட பூர்த்தியடையாத பச்சிளங் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து குழந்தைகள் வார்டில் வைத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சாக்சீடு குழந்தைகள் இல்லம்

காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க இயலாத காரணத்தால், பசும் பால் வழங்கி வந்திருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று குழந்தைகளுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பருவநிலை மாற்றம் காரணமாகவே குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாக குழந்தைகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

காப்பகத்திலுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு முறையான, ஊட்டச்சத்துள்ள உணவுகள் அளிக்கப்படுகின்றனவா என ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.