முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மாநகர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் வித்தியாசமாக உள்ளனர்.

செல்லூர் ராஜூ

ஆளும் கட்சியினர் இதுவரை தொகுதிக்கு வந்தது இல்லை. தற்போது அமைச்சர்கள் அதிக அளவில் வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டாலும் திமுக அமைச்சர்களே அதிக அளவில் இருக்கின்றனர்.

ஈரோடு களநிலவரம் சிறப்பாக உள்ளது ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியத்தை கிழக்குத் தொகுதி மக்கள் கொடுப்பார்கள் என நம்புகிறோம்.

செல்லூர் ராஜூ

ஜனநாயகம் வெல்லுமா பணநாயகம் வெல்லுமா என்பதை மக்கள்தான் கூற வேண்டும். எது மாதிரி இல்லாமல் புது மாதிரியாக ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளது.

புதிய கண்டுபிடிப்புகளுக்கு நோபல் பரிசு பெறுவதுபோல வாக்காளர்களை கவர்வதற்காக திமுக புதிய புதிய கண்டுபிடிப்புகளை செய்து வருகிறது.

திருமங்கலம் ஃபார்முலா, அரவக்குறிச்சி ஃபார்முலா, தற்போது ஈரோடு கிழக்கு என் புதிய ஃபார்முலாக்களை கொண்டு வருகின்றனர்.

மக்களை கூண்டுக்கள் அடைப்பதுபோல் அடைத்து ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களது வசதிக்கேற்ப உணவு, பணம் வழங்கி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு பணமழை பொழிகிறது.

தேர்தல் ஆணையம் 14 இடங்களில் சீல் வைக்கின்றனர். ஒரு மணி நேரத்தில் திமுகவினர் மற்ற இடங்களில் கூடாரங்கள் அமைத்து அங்கு சென்று செயல்படுகின்றனர்.

சீல் வைப்பதை தேர்தல் ஆணையம் கண்துடைப்பாக செய்கிறது. அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். கமல்ஹாசனின் கொள்கை பணத்திற்கானது. விளம்பரத்திற்காகவும் பணத்திற்காகவும் நடிக்கிறார்.

படத்தில் நடிப்பதைவிட பணம் அதிகமாக தருவதாக கூறி இருப்பார்கள், அதனால் கால்ஷீட் கொடுத்திருப்பார். கமல்ஹாசனை மக்கள் அரசியல்வாதியாக பார்ப்பது இல்லை, அவரை உலக நாயகன், நல்ல நடிகராகவே பார்க்கின்றனர். அவர் பேச்சை கேட்டால் ஓட்டு போடுபவர்களும் போட மாட்டார்கள். அவருக்கு பேசத் தெரியாது, பேசினாலும் மக்களுக்கும் புரியாது.

திமுக நேற்று வந்த கட்சி இல்லை, ஆட்களை எப்படி ஆஃப் செய்ய வேண்டும் என்பது தெரியும். கமல்ஹாசனை எந்த வகையில் ஆஃப் செய்தார்கள் எனத் தெரியவில்லை.

எங்களைப் பொறுத்தவரை ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் இப்போதாவது விழித்துக் கொண்டு ஆளுங்கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்களின் சட்டத்திற்கு புறம்பான செயலை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.