பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு ஏப்ரலில் அப்போதைய பிரதமர் இம்ரான் கானை பதவியிழக்கச் செய்து, புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீஃப் பதவியேற்றார். ஆனால், பாகிஸ்தானின் தற்போதைய நிலைமையானது, கடந்த ஆண்டு இலங்கை சந்தித்த பொருளாதார நெருக்கடியை ஒத்ததாகவே இருக்கிறது. ஒரு லிட்டர் பால் ரூ.250, கோழிக்கறி ஒரு கிலோ ரூ.780 என உணவுப் பொருள்கள் பலவற்றின் விலைகள் தாறுமாறாக எகிறியிருக்கிறது.
இதன் காரணமாக சாமான்ய மக்களின் அன்றாட வாழ்க்கையே பெரும் திண்டாட்டத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் க்வாஜா ஆசிஃப் (Khwaja Asif), நாடு ஏற்கெனவே திவாலாகிவிட்டதாக வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய க்வாஜா ஆசிஃப், “பாகிஸ்தான் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றும், நாட்டில் பொருளாதார சரிவு இருக்கிறதென்றும் மக்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். அது சரியானதும்கூட. பாகிஸ்தான் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. நாடு அதைத் தவறிவிட்டது.
நாம் இப்போது ஒரு திவாலான நாட்டின் குடியிருப்பாளர்கள். இது ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டது. நாம் இப்போது நம் சொந்தக் காலில் நிற்கவேண்டும். இந்தப் பிரச்னைக்கான தீர்வு நாட்டிலேயே இருக்கிறது. ஆனால், நாம் உதவிக்கு சர்வதேச நாணய நிதியத்தை (International Monetary Fund) எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.