முந்தைய ஆந்திர மாநிலம் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் என பிரிக்கப்பட்ட பிறகு பொருளாதார ரீதியாகப் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஹைதராபாத்தை தெலங்கானாவும், திருப்பதியை ஆந்திரப் பிரதேசமும் பகிர்ந்துகொண்டன. ஆந்திரப் பிரதேசத்தில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கப் பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி எடுத்துவருகிறார்.
வரும் மார்ச் 5, மற்றும் 6 -ம் தேதிகளில் விசாகப்பட்டிணத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தவிருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவும், ஆந்திராவில் முதலீடு செய்யவும் தமிழ்நாட்டின் முதலீட்டாளர்களை அழைக்க சென்னையில் முதலீட்டாளர்கள் சந்திப்பை நடத்தியது ஆந்திரப் பிரதேச மாநில அரசு.
இந்தச் சந்திப்பில் ஆந்திரப் பிரதேசத்தின் நிதி அமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத் கலந்துகொண்டார். கலந்துகொண்டு அவர் பேசுகையில், “இந்தியாவிலேயே தொழில்வளம் சிறந்து விளங்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலை வகித்துவருகிறது.
ஆந்திரப் பிரதேசத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் பாரம்பரியமான வரலாற்று பிணைப்பு உள்ளது. மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது ஆந்திராவும், தமிழகமும் ஒன்றாகத்தான் இருந்தது. அப்போதிருந்தே பிணைப்பு தொடர்கிறது. இதனால் பன்முகத்தன்மையில் இரு மாநிலங்களுக்கும் ஒற்றுமை இருக்கிறது. இந்தப் பிணைப்போடு சேர்த்து பொருளாதார நடவடிக்கைகளுக்கான பிணைப்பையும் வலுவாகப் பலப்படுத்த வேண்டும். கடல்சார் தொழில், சுகாதாரம், வேளாண்மை, உற்பத்தி, எலெக்ட்ரானிக், ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆந்திராவும் தமிழ்நாடும் இணைந்து செயல்பட்டால் மிகப்பெரும் வளர்ச்சியை நீண்ட காலத்துக்கு நம்மால் கொண்டுசெல்ல முடியும்.
வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வலுவான கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம். எனவே முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. தொழில் செய்ய ஏற்ற சூழல் என்ற வகையிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. தமிழக முதலீட்டாளர்களை ஆந்திராவில் முதலீடு செய்ய அழைக்கிறோம்.” என்று அவர் பேசினார்.
தமிழக முதலீட்டாளர்கள் சந்திப்பில் ஆந்திரப் பிரதேசத்தின் நிதி அமைச்சருடன் பிற துறைகளின் முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர். தொழில்கள், உள்கட்டமைப்பு, முதலீடு ஆகிய துறைகளின் சிறப்பு முதன்மை செயலாளர் கரிகால் வளவன், கைத்தறி மற்றும் ஜவுளி முதன்மை செயலாளர் கே.சுனிதா, ஐடி & எலக்ட்ரானிக்ஸ் சிறப்புச் செயலாளர் பி.சுந்தர், ஆந்திர கடல்சார் வாரியத்தின் சிஇஓ ஷான் மோகன், தொழில்துறை இயக்குனர் ஸ்ரீஜனா கும்மால்லா, ஆந்திரப்பிரதேச உணவுப் பதப்படுத்தல் சங்கத்தின் சிஇஓ ஶ்ரீதர் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.