சிங்கார வேலர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஆட்சியர் அலுவலகத்திலுள்ள சிங்காரவேலர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தி.மு.க ஆட்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தீக்குளிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தி.மு.க தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டது எனக் கூறிய எடப்பாடி பழனிசாமியின், விமர்சனத்துக்கு கனிமொழி பதிலளித்திருக்கிறார்.
கனிமொழிக்கு பழைய வரலாறெல்லாம் தெரியாது. தி.மு.க-வின் கொத்தடிமைத்தனம் என்பது அ.தி.மு.க ஆட்சியைக் கலைத்த இந்திரா காந்தியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்தவர் கருணாநிதி. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய தி.மு.க அமைச்சர்கள் இன்னும் வீடுகளுக்குள் புகுந்து பாத்திரத்தை மட்டும்தான் கழுவவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன.
ஈரோடு தேர்தலில் தோல்வியடைந்த பிறகு காங்கிரஸ்மீது தி.மு.க பழிபோடும். ஆடு மாடுகளைப் போல ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களை அடைத்து வைத்து, காலை டிபன், மதியம் பிரியாணி, காலை ரூ.500, மாலை ரூ.500 எனக் கொடுத்து அவர்களை வெளியே விடாமல் தடுத்து வருகிறார்கள். அவர்கள் இதுவரை தேர்தலுக்காக ரூ.40 கோடி வரை செலவழிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. தி.மு.க பிரமுகர்கள் என்ன அநியாயம் செய்தாலும் அதையும் தாண்டி அ.தி.மு.க வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.