பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் தான் மங்கா யாதவ். இவர் தனக்கு ஏற்பட்ட விதைப்பை வீக்கம் எனப்படுகிற ஹைட்ரோசீல் பிரச்னைக்காக, அரசின் ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.
இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சை செய்யுமாறு கூறியுள்ளனர். சிகிச்சை முடித்து வெளிவந்தவரிடம் `operation success’ என்று தெரிவித்துள்ளனர்.
என்ன சிகிச்சை தான் செய்தார்கள் என்று பார்த்தவர் அதிர்ந்து போயுள்ளார். இவருக்கு நிரந்தர கருத்தடை முறையான வாசெக்டமி சிகிச்சையைச் செய்துள்ளனர். மருத்துவர்களின் அலட்சியத்தால், திருமணம் ஆகாத ஒருவருக்கு வாசெக்டமி சிகிச்சை நடந்துள்ளது. இதனால், யாதவும் அவரின் குடும்பத்தினரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இது குறித்து யாதவ் கூறுகையில், “நான் ஹைட்ரோசீல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தேன். எனக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. செயின்பூர் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில், மருத்துவர்கள் தவறான அறுவை சிகிச்சையை எனக்குச் செய்துள்ளனர்.
சில வாரங்களில் எனக்குத் திருமணம் நடைபெற உள்ளது. இப்போது என்னால் எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும். என்னுடைய வாழ்வையே நாசம் செய்து விட்டார்கள். இது குறித்து உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
இருந்த போதும் மருத்துவர்கள், `நோயாளியின் ஒப்புதலுக்குப் பின்பே வாசெக்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளனர்.
செயின்பூர் ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பாளர் சுனில் குமார் கூறுகையில்,“இந்த விவகாரம் எங்கள் கவனத்திற்கு வந்து, விசாரணை நடந்து வருகிறது. சுகாதாரத்துறையிடம் அறிக்கை சமர்பிப்போம். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அறிவித்துள்ளார்.