நாகர்கோவில், வடசேரி மேலகலுங்கடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர் மாந்தீரிகம், பரிகார பூஜைகளையும் செய்து வந்திருக்கிறார். இவரிடம் நாகர்கோவில் பள்ளிவிளையில் வசிக்கும் 55 வயது தொழிலாளி ஒருவர், தன் மனைவியை அழைத்து வந்திருக்கிறார். அடிக்கடி தன்னுடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போவதாக கூறினார். அப்போது மணிகண்டன், `உங்கள் மனைவிக்கு பேய் பிடித்திருக்கிறது. நான் சரி செய்து தருகிறேன்’ என கூறினார். இது தொடர்பான பூஜைகளுக்காக அந்த தொழிலாளியின் வீட்டுக்கு அடிக்கடி மணிகண்டன் சென்று வந்திருக்கிறார்.
அந்த தொழிலாளிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகளுக்கு 13 வயது ஆகிறது. 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த சில நாள்களாக இந்த மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அடிக்கடி வயிறு வலிப்பதாக கூறியிருக்கிறார். இதையடுத்து, மாணவியை ஆசாரிப்பள்ளத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
மருத்துவப் பரிசோதனை செய்த போது மாணவி 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதை கேட்டதும் தொழிலாளி குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து மாணவியிடம் விசாரித்த போது, “மந்திரவாதி மணிகண்டன் அடிக்கடி எனக்கு பிஸ்கட், சாக்லெட் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்து தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். உன்னுடைய அம்மாவுக்கு குணமாக வேண்டுமென்றால் நான் சொல்கிறபடி கேட்க வேண்டும். வேறு யாரிடமும் இது பற்றி எதுவும் கூற கூடாது” என மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்தார்.
இதையடுத்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி போலி மந்திரவாதி மணிகண்டன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைதுசெய்தனர். பின்னர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.