சமீபத்தில் மைக்ரோசாப்ட், அமேசான், மெட்டா, ட்விட்டர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்த நிலையில் கடந்த வாரம் சுமார் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது கூகுள் நிறுவனம். இதுகுறித்து பேசிய சுந்தர் பிச்சை, ” 25 ஆண்டுகளைக் கடந்த பழைமையான கூகுள் நிறுவனம் தற்போது கடினமான பொருளாதார சுழற்சியைக் கடக்க வேண்டியுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சிலர் தங்களது பணிநீக்கம் தொடர்பான கதையை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயரான டாமி யார்க், “விடுமுறை முடிந்து பணிக்கு வந்த நான்காவது நாள் பணி நீக்கம் குறித்து செய்தி வந்தது. இதை கேட்டபோது முகத்தில் ஒருவர் அறைந்ததைப் போல உணர்ந்தேன்” என்று சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல கூகுள் நிறுவனத்தின் HR துறையில் பணியாற்றி வந்த டேன் லானிகன் ரயன் என்பவர் நிறுவனத்திற்காக புதிய ஊழியரை தேர்ந்தெடுக்க தொலைபேசியில் நேர்காணல் நடத்திக்கொண்டிருந்த போது தனது வேலை பறிபோனதாக தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், ” நான் தொலைபேசியில் நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென எனது இணைப்பு துண்டிக்கப்பட்டது. என்னுடன் பணிப்புரிந்த மற்ற ஊழியர்களும் இதே பிரச்சனையை சந்தித்துள்ளனர்.
நாங்கள் அனைவரும் மின்னஞ்சல் வரும் வரை இதை தொழில்நுட்ப கோளாறு என்றுதான் நினைத்தோம். பின் நிறுவனத்தில் தனது ஆக்சஸ் துண்டிக்கப்பட்டப் போதுதான் சுமார் 12,000 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்திருப்பதை அறிந்தோம். எதிர்பாராத விதமாக வேலையிலிருந்து நான் நீக்கப்படுவேன் என்று நினைக்கவில்லை” என்று வருதத்துடன் தனது பணி நீக்கம் தொடர்பான கதையைப் பகிர்ந்துள்ளார்.