அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழுமம் மேலும் சரிவைச் சந்தித்து வருகிறது.

இன்று 20 சதவிகிதம் வீழ்ச்சியடைந்த அதானி குழுமம்

ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வு அறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமம் மேலும் சரிவைச் சந்தித்து வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் இருக்கும் அதானி குழுமத்தின் 10 நிறுவனப் பங்குகளும் இன்று 20 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 3,112 ரூபாய் முதல் 3,276 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்வதற்கான பங்கு விற்பனை இன்று தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நிறுவனங்கள் இந்த பங்கு விற்பனையில் 5,985 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள பங்குகளை வாங்க முதலீடு செய்துள்ளன. மீதமுள்ள பங்குகளை பொதுமக்களுக்கு விற்க ஜனவரி 31ஆம் தேதி வரை கால அவகாசம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் அதானி குழும பங்குகளின் விலை இன்று மட்டும் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் வரை வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

image

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 18 சதவீதம் சரிவை கண்ட நிலையில், அதானி துறைமுகம் நிறுவனத்தின் பங்குகள் 16 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. இதைத் தவிர அதானி கிரீன், அதானி வில்மர், அதானி பவர், அதானி ட்ரான்ஸ்மிஷன், மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகிய அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. இவை தவிர சமீபத்தில் அதானி குழுமத்தால் விலைக்கு வாங்கப்பட்ட அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளும் 17 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தன.

பங்குச்சந்தையிலும் இறக்கம்

இதனால், அதானி குழும பங்குகள் 85 சதவீதம் வரை வீழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளதாக ஹிண்டன்பர்க் கருத்து தெரிவித்துள்ளது. அதானி குழுமத்திற்கு பல்வேறு வங்கிகள் கடன் அளித்துள்ளதால் வங்கிகளின் பங்குகள் விலையும் சரிவை சந்தித்துள்ளது. நிஃப்டி பேங்க் என அழைக்கப்படும் வங்கிகளின் பங்குகள் விலையை பிரதிபலிக்கும் குறியீட்டு எண் இன்று ஐந்து சதவீதம் அல்லது 1302 புள்ளிகள் வீழ்ச்சியை கண்டது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வீழ்ச்சியால் பங்குச்சந்தையில் பிற நிறுவனங்களின் பங்குகளின் விலையும் கணிசமாக இறங்கி உள்ளது. இன்று மட்டும் நிஃப்டி 1.61% அல்லது 287 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. சென்செக்ஸ் 1.45% அல்லது 874 புள்ளிகள் சரிவை கண்டது. இந்த வருட ஆரம்பத்தில், 18 ஆயிரத்தை கடந்து வர்த்தகமாகி கொண்டிருந்த நிஃப்டி, தற்போது 17,604 என்கிற தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இது கடந்த மூன்று மாதங்களில் காணப்படாத சரிவு என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

image

7வது இடத்தில் அதானி

அதானி குழுமப் பங்குகள் இன்று மேலும் சரிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து அவர், உலக பணக்காரர் பட்டியலில் ஏழாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. போர்ப்ஸ் வெளியிட்டிருக்கும் பணக்காரர்களின் பட்டியலில், இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியதும், அதானியின் சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலர்கள் சரிந்து 100 பில்லியன் டாலர்களாகக் குறைந்தது. இதன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு (6வது இடம்) அடுத்த இடத்தில் அதானி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை

அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், “அதானி குழுமம் மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளது. வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை நடத்தி வரி ஏய்ப்பு செய்துள்ளது” என தெரிவித்திருந்தது. அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள், அடிப்படையில் 85 சதவீதம் பின்னடைவைக் கொண்டுள்ளன எனவும் அது தெரிவித்திருந்தது. அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், ஆவணங்களின் பகுப்பாய்வு உள்ளிட்ட ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் அது கூறியிருந்தது. இந்த அறிக்கையால் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்புகள் கடும் சரிவைக் கண்டுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் 31-ல் முடிவடைந்த நிதியாண்டு வரை, அதானி குழுமத்தின் மொத்த கடன்கள் 40% வரை அதிகரித்து 2.2 ட்ரில்லியன் ரூபாயாக உள்ளது.

image

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பின்னர், அதானி துறைமுகங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகியவை, நடப்பாண்டின் ஜூலை மாத தொடக்கத்தில் இருந்த மிகக் குறைந்த நிலையான 7.3%-க்கு சரிந்தது. அதே நேரத்தில் அதானி எண்டர்பிரைசஸ் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.7% சரிந்தது. அதானிக்கு சொந்தமான சிமெண்ட் நிறுவனங்களான ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ் முறையே 6.7% மற்றும் 9.7% சரிந்தன. ரீஃபினிட்டிவ் தரவுகளின் அடிப்படையில், அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 நிறுவனத்தின் கடன் சுமைகள் அதிகரித்துள்ளன. அதன்படி அதானியின் க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் கடன் சுமை 2,000 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கடந்த 25ஆம் தேதி முதல் அதானி குழும பங்குகளின் விலை சரிந்து, அந்தக் குழுமத்தின் நிகர மதிப்பு கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதானி குழுமம் மறுப்பு

இதற்கு அதானி குழுமம், ”இந்த அறிக்கை தவறானது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்திருந்ததுடன், ”அதானி குழுமத்தின் மதிப்பைக் குலைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரமற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டிருக்கிறது. ஆகையால் ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியிருந்தது. அதானி குழுமத்தை சேர்ந்த முக்கிய நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் இருபதாயிரம் கோடி ரூபாய்க்கு விற்கப்படுவதை தடுக்கவே இந்த அவதூறு பிரச்சாரம் என அதானி குழுமம் குற்றம்சாட்டியிருந்தது.
இதற்குப் பதில் அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க், ”தாங்கள் அறிக்கை வெளியிட்டு 36 மணி நேரம் கடந்த பிறகும், நாங்கள் கேள்வி எழுப்பிய எதற்கும் அதானி நிறுவனம் இதுவரை பதில் அளிக்கவில்லை. அதேநேரத்தில், அதானி நிறுவனம் மேற்கொள்ளும் சட்டரீதியான எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருக்கிறோம். ஆய்வறிக்கையில் தாங்கள் குறிப்பிட்ட எந்த ஒரு தகவலுக்கும் முழுப் பொறுப்பு ஏற்கிறோம்” என தெரிவித்திருந்தது குறிப்பிட்டிருந்தது.

image

மீண்டும் அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க்

மேலும், “எங்கள் அறிக்கையின் இறுதியில், தாங்கள் 88 நேரடியான கேள்விகளைக் கேட்டிருந்தோம். அவற்றுக்கு அதானி நிறுவனம் வெளிப்படைத்தன்மையுடன் பதில் தெரிவிக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இதுவரை எந்த ஒரு பதிலும் அந்நிறுவனத்திடம் இருந்தும் வரவில்லை. இரண்டு ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு, 720 மேற்கோள்களுடன், 106 பக்கங்கள் கொண்டதாக நாங்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையை அடிப்படை, ஆதாரமற்றதாக கூறிய அதானி நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து யோசித்து வருகிறோம்.

அதானி நிறுவனம் மேற்கொள்ளும் சட்டரீதியான எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருக்கிறோம். ஆய்வறிக்கையில் நாங்கள் குறிப்பிட்ட எந்த ஒரு தகவலுக்கும் முழுப் பொறுப்பு ஏற்கிறோம். இந்த விஷயத்தில் அதானி நிறுவனம் தீவிரமாக இருக்கும்பட்சத்தில், எங்கள் நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம். அதானி குழும் தொடர்பாக எங்களிடம் விரிவான அறிக்கை உள்ளது. எங்களுக்கு எதிரான எந்தவொரு சட்டவடிக்கையும் தகுதியற்றதாகவே இருக்கும்” என அது தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்தான் இன்று, பங்குச் சந்தையில் அதானி குழுமம் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

image

காங்கிரஸ் கட்சி கோரிக்கை

இந்த நிலையில், அதானி மோசடி குறித்து உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “அதானி நிதி மோசடியால் நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரப் பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆகையால், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை அமைப்பான செபி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியன முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.