வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
எங்கள் கால மார்கழி-60 ஸ் கிட்ஸ் கட்டுரையில் கோசுமல்லியைக் குறிப்பிட்டு,கமெண்டில் செய்முறை கேட்டால் அளிப்பதாக வாக்களித்திருந்தேன்.ஒரு சிலர் அது குறித்துக் கேட்டிருந்ததால் தனிக் கட்டுரையாகவே எழுதியுள்ளேன்..
மெயின் டிஷ்ஷோ…சைடு டிஷ்ஷோ… என்று எதைச் செய்தாலும் அடுப்பும்,நெருப்பும் அவசியம் தேவைப்படும்.ஆனால் இப்பொழுது நாம் செய்யப்போகும் சுவை,மணம்,சத்து நிறைந்த இந்தக் கோசுமல்லிக்கு ஸ்டவ்,கேஸ் என்ற எதுவும் தேவையில்லை. அவை இல்லாமலே இதனைச் செய்வதாலும்,இதில் சேர்க்கப்படும் பொருட்கள் ‘ராவாக’இருப்பதால் அதிக எதிர்ப்பாற்றலை உடலுக்குத் தருவதாலுமே இது சிறந்ததாகத் தோன்றுகிறது.
சரி! இதற்குத் தேவையான பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.
-சாம்பார் வெங்காயம்(சிறிய வெங்காயம்)-15 எண்ணிக்கை
-புளி-ஒரு பெரு நெல்லிக்காய் அளவு
-உடைத்த தேங்காய் மூடி-1
-பச்சை மிளகாய்-2 (இல்லை என்றால் காய்ந்த மிளகாயை சப்ஸ்டிடியூட்டாகப் பயன்படுத்தலாம்)
-தேவைக்கேற்ற அளவு உப்பு
இப்பொழுது செய்முறையைப் பார்ப்போம்.
புளியை ஒரு சிறு பவுலில் போட்டு,நன்கு மூழ்கும் அளவுக்கு நீரை ஊற்றி,ஓரமாக வைத்து ஊற விடவும்.சிறு வெங்காயத்தைத் தோலுரித்து விட்டு சிறு,சிறு துண்டுகளாக நொறுங்கக் ‘கட்’ செய்து கொள்ளவும்.இரண்டு பச்சை மிளகாயையும்,வடைக்கு நறுக்குவது போன்று பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.தேங்காய் மூடியை நன்கு துருவிக் கொள்ளவும்.ஊறிய புளியைக் கோது நீக்கி நன்கு திக்காகப் பிழிந்து கொள்ளவும்.மூலப் பொருட்கள் முழுதும் இப்பொழுது தயார்.
வாய் அகண்ட பாத்திரத்தில் முதலில் தேங்காய்த் துருவலைப் போட்டுக் கொள்ளவும். அதன் மீது கட் செய்யப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போடவும்.அதன்மேல் புளிக் கரைசலை ஊற்றி,உப்பிட்டுப் பிசையவும்.கலவை சொத சொதவென்று இருக்கும் அளவுக்குப் புளிக் கரைசலைச் சேர்க்கவும்.பிசைந்த கோசுமல்லியை நன்றாக அழுத்தி,ஓர் ஐந்து நிமிடங்களுக்கு அனைத்தும் இணைய நேரம் கொடுத்து வைத்து விடவும்.
‘கையால் பிசைவதா?’ என்று சங்கடப் படுபவர்கள் ஸ்பூன்களைப் பயன்படுத்தலாம். ஆனால்,இட்லி,தோசை மாவைக் கையால் கரைத்துத்தானே புளிக்க வைக்கிறோம். அதைப்போல கையால் பிசைவதால் மூலப் பொருட்கள் முழுதுமாக ஒன்று சேர்ந்து ருசியைக் கூட்டுமாம்.
இப்பொழுது கோசுமல்லி தயார். பழைய சோற்றுக்கு மிகச் சிறந்த நண்பன் இந்தக் கோசுமல்லி. சோற்றில் கலந்தும் சாப்பிடலாம். இட்லி,தோசை,சப்பாத்தி போன்றவற்றுக்கும் நல்ல சைடு டிஷ்!முன்பெல்லாம் ஹார்லிசுக்கு ஒரு விளம்பரம் வருமே…’அப்படியே சாப்பிடலாம்‘ என்று!அதைப்போலத் தனியாகவும் சாப்பிடலாம்.யாம் விளம்பர ரகம்.
இதற்கு எங்கள் பகுதியில் கூறப்படும் பெயர் கோசுமல்லி. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்கள்கூட இருக்கக் கூடும்.கோசு மல்லி என்றதும்,கோசில் செய்யக் கூடியதாக இருக்குமென்று உங்களில் பலர் நினைத்திருக்கலாம்.ஆனால் இங்கு கோசுக்கு வேலையில்லை! அடுப்பின்றி நெருப்பின்றி அவசரமாகச் செய்யக்கூடிய இதனைச் செய்து ருசித்துப் பாருங்கள்.
பி.கு: கமெண்டில் கோசுமல்லி தயாரிக்கக் கேட்டிருந்த Chandra c மற்றும் Ruskin ஆகியோருக்கு இதனைக் காணிக்கையாக்குகிறேன்.
-ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.