பீகாரில் கடந்த ஆண்டு முதல்வர் நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவுடன் இணைந்து புதிய கூட்டணியில் ஆட்சியமைத்தப் பிறகு, ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு) கட்சிக்குள்ளேயே அவ்வப்போது சில தலைவர்கள் முரண்பட்ட கருத்துகளை கூறிவருகின்றனர். இப்படியான சூழலில் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான உபேந்திர குஷ்வாஹா, பா.ஜ.க-வுடன் தொடர்பிலிருப்பதாகப் பேச்சுகள் எழுந்த பிறகு, முதல்வர் நிதிஷ் குமார் அவரை கட்சியிலிருந்து விலகுமாறு கூறியிருக்கிறார்.

முதல்வர் நிதிஷ் குமார் – உபேந்திர குஷ்வாஹா

இந்த நிலையில் உபேந்திர குஷ்வாஹா, `கட்சியின் சொத்தில் என்னுடைய பங்கை வாங்காமல் எப்படி விலகுவது’ எனக் கூறியிருப்பது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து உபேந்திர குஷ்வாஹா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நன்றாகச் சொன்னீர்கள். மூத்த சகோதரர்களின் கட்டளையின்படி வீட்டை(கட்சி) விட்டு இளைய சகோதரர்கள் வெளியேறினால், மூத்தவர்கள் அனைவரும் முன்னோர்களின் சொத்துகளை அபகரித்துக் கொள்வீர்கள். சொத்தில் என்னுடைய பங்கை வாங்காமல் நான் எப்படி கட்சியிலிருந்து வெளியேறுவது…” என இந்தியில் ட்வீட் செய்திருக்கிறார்.

உபேந்திர குஷ்வாஹா

அதைத் தொடர்ந்து கட்சியின் மற்றொரு தலைவர் உமேஷ் குஷ்வாஹா, “உபேந்திர குஷ்வாஹா தன்னுடைய நடத்தைக்காக வெட்கப்படவேண்டும். உபேந்திர குஷ்வாஹா இன்னும் கட்சியின் உறுப்பினர் படிவத்தை சமர்ப்பிக்கவில்லை. நிதிஷ் குமார், அவரை உபேந்திர சிங்கிலிருந்து உபேந்திர குஷ்வாஹா-வாக மாற்றினார். ஆனால், அவர் கட்சியை உடைக்க முயல்கிறார். சுயமரியாதை என்று ஒன்று இருந்தால் அவர் பதவி விலக வேண்டும்” என்று கடுமையாகச் சாடியிருக்கிறார்.

முதல்வர் நிதிஷ் குமார்

மேலும் இந்த விவகாரத்தில் முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று முதல்வர் நிதிஷ் குமார், `உபேந்திர குஷ்வாஹாவை என்னுடன் பேசச் சொல்லுங்கள். ஏற்கெனவே அவர் கட்சியைவிட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை’ என்று கூறியிருந்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.