சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பழைய கட்டடம் இடிக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் பெண்கள் உள்ளிட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சேதமடைந்த பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் பணி தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கட்டடம் இடிக்கும் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கட்டடம் இடிக்கும்போது எதிர்பாராத விதமாக சாலையில் சென்றுக்கொண்டிருந்தவர்கள் மீது சுவர் விழுந்து விபத்து ஏற்பட்டுருக்கிறது.
இதில் ஒருவர் படுகாயமடைந்திருக்கிறார். மேலும் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனிடையே படுகாயம் அடைந்த பெண் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மீட்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் ஆயிரம் விளக்குப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்து காரணமாக அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.