சென்னை, சைதாப்பேட்டை ஆலந்தூர் ரோடு நெருப்பு மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹயாத்பாஷா. இவருக்கு 17 வயதில் மகன் இருக்கிறான். அவன், கடந்த 24.1.2022-ம் தேதி தன்னுடைய உறவினர்களுடன் சைதாப்பேட்டை ஆட்டுத் தொட்டி பாலம் அருகே, தன்னுடைய நண்பனின் 16-ம் நாள் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றான். அப்போது அங்கு இரவில் கானா பாடும் நிகழ்வின்போது, சிறுவன் தரப்பினருக்கும், துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்த சக்திவேல் என்பவரின் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இரண்டு தப்பினர்களுக்கிடையே நடந்த தகராறு, அடிதடியாக மாறியிருக்கிறது. அப்போது சக்திவேல் தரப்பு, சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டது. படுகாயமடைந்த சிறுவனை சைதாப்பேட்டையிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் வரும் வழியில் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதனால் சிறுவனின் அப்பா ஹயாத்பாஷா, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர்.
சிறுவனைக் கொலைசெய்த வழக்கு தொடர்பாக மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ் என்கிற தினேஷ்குமார் (20), அசோக் (22), அருண் என்கிற மச்சான் குரங்கு (22), ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த பள்ளு பிரவீன் (22), ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (22) ஆகிய ஆறு பேரை போலீஸார் கைதுசெய்தனர். இந்த வழக்கில் 17 வயது சிறுவன் ஒருவனையும் போலீஸார் பிடித்தனர். அவர்களிடமிருந்து மூன்று கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் சக்திவேல் உட்பட இரண்டு பேரை போலீஸார் தேடிவருகின்றனர். விசாரணைக்குப் பிறகு ஆறு பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர். அதோடு, சிறுவனை சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.
இது குறித்து போலீஸார், “சென்னை, சைதாப்பேட்டை, ஆலந்தூர் சாலை, செட்டித் தோட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் (20) என்பவர் கடந்த 15- ம் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரின் துக்க நிகழ்ச்சிக்குத்கு ஹயாத்பாஷாவின் மகன் சென்றபோதுதான், அங்கு வந்த சக்திவேல் என்பவருடன் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஹயாத்பாஷாவின் மகன் உயிரிழந்துவிட்டார். அந்த வழக்கில் இதுவரை ஒரு சிறுவன் மற்றும் ஆறு பேரைக் கைதுசெய்திருக்கிறோம்” என்றனர்.