கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த ராமச்சந்திரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணப்பா (52). இன்று அதிகாலை, அப்பகுதியிலுள்ள விளைநிலம் அருகே, கத்திக் குத்து காயங்களுடன் கற்களால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். அவரின் சடலத்தை மீட்ட பேரிகை போலீஸார் விசாரணை நடத்தியதில், கிருஷ்ணப்பாவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த, இவரது விளைநிலத்துக்கு அருகிலுள்ள விவசாயக்கூலி அப்பையப்பாவுக்கும் (60) முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.
அப்பையப்பாவை பிடித்து விசாரித்ததில், கிருஷ்ணப்பா விளைநிலத்துக்கு அருகே பெங்களூரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்தில், அப்பையப்பா விவசாயக் கூலி வேலை செய்துவந்ததும், அந்த நிலத்திலிருந்த பொருள்கள் சிலவற்றை கிருஷ்ணப்பா திருடியதாக நினைத்து அவரைக் கொன்றதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து தனிப்பிரிவு போலீஸாரிடம் விசாரித்தோம். ‘‘அப்பையப்பா வேலை செய்து வந்த விளைநிலத்தில் பைப், மல்ஷிங் ஷீட் உட்பட பல பொருள்கள், தொடர்ந்து காணாமல் போயுள்ளன. கிருஷ்ணப்பாதான் அவற்றை திருடியதாக நினைத்த அப்பையப்பா, அவரைக் கொலைசெய்ய திட்டமிட்டுள்ளார். அவர்கள் கிராமத்தில் நேற்று இரவு தெருக்கூத்து நடந்துள்ளது. வேடிக்கை பார்க்கச்சென்ற கிருஷ்ணப்பாவை தனியாக பேசவேண்டுமென அழைத்துச் சென்ற அப்பையப்பா, கத்தியால் குத்தி கீழே தள்ளி, அங்குள்ள கல்லை தலையில் போட்டு கொலைசெய்துள்ளார். மேலும், `என் நிலத்துல பொருள்களை எடுத்துட்டாரு, நிறைய நஷ்டம் ஆச்சு அத்தான் கொன்னுட்டேன்’ என வாக்குமூலமும் அளித்துள்ளார். கொலைக்கான உண்மை காரணம் குறித்து முழுமையாக விசாரிக்கிறோம்’’ என்றனர்.