‘ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை, கட்சி வாய்ப்பு வழங்கினால் என் இளைய மகன் போட்டியிட வாய்ப்பு இருக்கும்’ என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்குத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கிய தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நன்றி. இப்போதே தொகுதியில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கை சின்னத்தில் வாக்குக் கேட்டு பரப்புரையை தொடங்கிவிட்டனர்.

காங்கிரஸ் வேட்பாளரை ஓரிரு நாளில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை அறிவிக்கும். ஈரோடு கிழக்குத் தொகுதியில் நான் போட்டியிடவில்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இளைய சமுதாயத்தை சார்ந்தவர்கள் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

அதேபோல் என்னுடைய குடும்பத்தில் இருந்து ஒருவர் நிற்கவைக்க வேண்டும் எனக் கட்சி கேட்டுக் கொண்டால் இளைய மகன் சஞ்சய் போட்டியிட வாய்ப்பு அளிக்க
கோரிக்கை வைத்துள்ளேன். கட்சியில் மற்ற சிலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்” என்று தெரிவித்தார். இதுகுறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும் என்றும், தலைமை எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “அ.தி.மு.க. நான்கு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள். அதிமுகவிடம் ஒற்றுமை இல்லை, குழப்பத்தில் இருக்கிறார்கள். அதிமுகவை பொருத்தவரை ஓபிஎஸ், இபிஎஸ், தினகரன், சசிகலா என்ன செய்யப் போகிறார்கள் என தெரியாமல் இருக்கின்றனர். 4 பேரும் சேர்ந்து தேர்தலில் நின்றாலும், தனித்தனியாக நின்றாலும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. திமுக அரசு பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று பாஜக சொல்வது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தான் மூன்றாவது கட்சியாக இருக்கிறது. அகில இந்திய கட்சியாக இருக்கும் பாஜக தமிழகத்தில் மாவட்ட கட்சியாக மாறிவிட்டது” இவ்வாறு அவர் விமர்சித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.