ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். இவர், கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி இரவு 12 மணியளவில் எம்.ஜி.ஆர் நகர் அருகே நடந்து சென்றிருக்கிறார். அப்போது பைக்கில் வந்த இருவர், தங்களை போலீஸ் என்று சொல்லிக்கொண்டு விசாரிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தி, இளம்பெண்ணை அழைத்துச் சென்றிருக்கின்றனர். வடமங்கலம் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்குச் சென்றதும், அந்தப் பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டிக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். 

காயம்பட்ட குற்றவாளிகள்

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீஸார் அந்தப் பகுதியிலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். தீவிர தேடுதல் வேட்டையில் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த நாகராஜ் (31), பிரகாஷ் (31) ஆகிய இருவரைப் பிடித்து போலீஸார் தொடர் விசாரணை செய்துவந்தனர். இருவரும் போலீஸாரிடம் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர். 

தொடர் விசாரணையில், இவர்கள் இருவரும் தங்களை போலீஸ் என்று சொல்லிக்கொண்டு பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும், தங்களை போலீஸ் என்று காட்டிக்கொள்ள ஆன்லைனில் வாக்கி டாக்கியை வாங்கியதும் தெரியவந்தது. காக்கி பேன்ட், வாக்கி டாக்கி, லத்தியுடன் வலம்வரும் இவர்கள், சில தினங்களுக்கு முன்புகூட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். அந்த வழக்கும் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

காயம்பட்ட குற்றவாளிகள்

மேலும், இவர்கள் இருவர்மீதும் பல்வேறு வழிப்பறி, கொள்ளை, திருட்டு, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. காஞ்சிபுரம் பகுதியைத் தவிர திருவள்ளூர், அரக்கோணம், செய்யாறு போன்ற இடங்களிலும் இருவரும் ஒன்றாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததும், பத்துக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாரிடம் பேசினோம். “குற்றவாளிகளைப் பிடித்துக் குற்றச்செயலுக்குப் பயன்படுத்திய பைக்கை கைப்பற்ற இருவரையும் அழைத்துச் சென்றோம். அவர்கள் தங்கள் பைக்கை பாலசெட்டிசத்திரம் அருகிலுள்ள யூகலிப்டஸ் காட்டில் வைத்திருப்பதாகக் கூறினார்கள். அங்கு சென்றதும், பைக்கில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை நாகராஜ் எடுத்து வானத்தை நோக்கியும், எங்களை நோக்கியும் சூட தொடங்கிவிட்டார்.

காயம்பட்ட குற்றவாளிகள்

அந்த பதற்றமான சூழலைப் பயன்படுத்தி பிரகாஷ் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். காவலர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தவும், வேறு வழியில்லாது நாங்களும் எதிர்த் தாக்குதல் நடத்தினோம். அதில் நாகராஜுக்கு வலது முழங்காலுக்குக் கீழே காயம் ஏற்பட்டது. அதேபோல, தப்பித்துச் சென்ற பிரகாஷ் கீழே விழுந்ததில் அவனுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம்” என்றனர்.

குற்றவாளிகள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது. அதோடு, அவர்களிடமிருந்து வாக்கி டாக்கி, கத்தி, அரிவாள், லத்தி, செல்போன்கள், கையுறைகள், முகமூடி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கைப்பற்றப்பட்டன. குற்றவாளிகள் இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது மேல் சிகிச்சைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இரண்டு தினங்களுக்கு முன்புதான் காஞ்சிபுரம் பகுதியில் கல்லூரி மாணவியை மது போதையிலிருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த நிலையில், இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.