நேபாளில், அந்நாட்டுப் பயணிகள் விமானமான, எட்டி ஏர்லைன்ஸ் விபத்துக்குள்ளானதில், இதுவரை 68 பேரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. நேபாளில் சமீபத்தில் இதுபோன்ற கோர விமான விபத்து நடந்ததில்லை என்று கூறப்படுகிறது. இந்த விமானத்தில் 5 இந்தியர்கள் பயணம் செய்தது தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னும் காபூலில் வசித்து வந்த முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான முர்சல் நபிஸாதா அவரின் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் 6 புள்ளி ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. ஆனால் எந்த ஒரு உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில் பாலியல் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட ஆன்ட்ரூ டேடின் 3.95 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருள்கள் கைப்பற்றப்பட்டது. இதற்கு முன்னதாக அவரின் சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாரீசின் Gare du Nord ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில், 31 வயது நபர் ஒருவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபரின் அடையாளம் பற்றி எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை.
மெக்சிகோவில் எந்த பொது இடங்களிலும் புகை பிடிக்கக் கூடாது என்ற கடுமையான புகை எதிர்ப்பு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
கலிபோர்னியாவில் பொழிந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், அந்நகரமே வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் 25 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெர்மனியின் Lützerath பகுதியில் கூடியிருந்த 300-க்கும் மேற்பட்ட காலநிலை மாற்றப் போராளிகளைப் பல மணி நேர முயற்சிக்குப் பிறகு அந்நாட்டுக் காவல்துறை அப்புறப்படுத்தியது.
பெரு நாட்டில் நிலவிவந்த கடுமையான போராட்டங்களை கட்டுப்படுத்த லிமா பகுதியில் அவசரக்கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ரஷ்யாவின் ராம்போ’ என அழைக்கப்படும் பிரபல நடிகர் Smolyaninov, போர் நடத்தும் ரஷ்யாவின் மீது வெறுப்பாக இருப்பதாகவும், உக்ரைனுக்காக அவர்களுடன் இணைந்து போர் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.