விண்ணை முட்டும் அளவுக்கு தங்கம் விலை தினந்தோறும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் ஐந்தாயிரம் ரூபாயை கடந்தாலும் தங்கத்திற்கான மதிப்பு காரணமாக அதனை வாங்க மக்கள் நகைக் கடைகளுக்கு படையெடுப்பதும் தவறுவதில்லை.
இதே தங்கத்தின் விலை கிராமுக்கு வெறும் 10 ரூபாயாக இருந்தால் இப்போது இருக்கும் படையெடுப்பு பன்மடங்காகவே உயர்ந்திருக்கும். ஆனால் இந்த குறைந்த விலைக்கு தங்கம் வாங்க வேண்டுமென்றால் டைம் டிராவல் செய்து 1960ம் ஆண்டு காலத்துக்குதான் செல்ல வேண்டும்.
ஏனெனில் 1959ம் ஆண்டு விற்கப்பட்ட தங்கத்தின் ரசீது ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருவதோடு நகைப்பிரியர்களுக்கு ஷாக் அடிக்க வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
அதன்படி மகாராஷ்டிராவின் புனேவில் வாங்கப்பட்ட தங்க நகைக்கான ரசீதில், ஒரு டோலா அதாவது 11.66 கிராம் தங்கத்தின் விலை வெறும் 113 ரூபாயாக மட்டுமே இருந்திருக்கிறது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஒரு கிராம் தங்கத்தின் விலை அப்போது வெறும் பத்தே பத்து ரூபாய்தான். அந்த பத்து ரூபாய்க்கு இப்போதைய காலகட்டத்தில் ஒரு சாக்லேட் மட்டுமே வாங்கலாம்.
இப்போதைய தங்கத்தின் நிலவரப்படி ஒரு கிராம் 5,172 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த தொகைக்கு 60களில் 533 கிராம் தங்கம் வாங்க முடியும். அந்த ரசீதின் படி ஷிவ்லிங் ஆத்மாராம் என்பவர் மொத்தம் ஆயிரம் ரூபாய்க்குள் வெள்ளி மற்றும் தங்கத்தையே வாங்கியிருக்கிறார். அதே 1000 ரூபாய்க்கு இப்போது 12.5 கிராமுக்கு மேல் வெள்ளி கூட வாங்க முடியாத சூழலே நிலவுகிறது.