ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக பூம்புகார் மீனவ கிராமத்தினர் ஊர்விலக்கம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவ குடும்பத்தினர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் நடுத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் 2 ஆண்டுக்கு முன்பு ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக இவரை கிராம நாட்டாமை பஞ்சாயத்தினர் குடும்பத்தோடு ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
மேலும், மீன்பிடித் தொழிலுக்கு செல்ல இவரை யாரும் உடன் அழைத்துச் செல்லவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட லட்சுமணன், பலமுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், விரக்தி அடைந்த லட்சுமணன் தனது குடும்பத்தினருடன் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, அங்கு குடும்பத்தினருடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, பின்னர் அவர்களிடம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.