கிருஷ்ணகிரியில் பாரம்பரிய உணவு திருவிழாவில் 200-க்கும் பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி உணவு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பொதுமக்கள் நோயின்றி வாழவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், சத்தான உணவு, சரிவிகித உணவு கடைபிடிக்கும் பொருட்டும், பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டது. கோதுமை அல்வா, கோதுமை கார அடை, கோதுமை ரவா உப்புமா, கோதுமை முறுக்கு, கோதுமை பாயசம், ராகி உப்புமா, திணை அரிசி சாதம், ராகி களி, சோளம், குதிரைவாலி அரிசி பொங்கல் போன்ற பாரம்பரிய உணவுகளும், இன்றைய பாஸ்ட் புட் உணவுகளான பீட்சா, பர்கர், பிரட், பிரைடு ரைஸ் போன்ற வகைவகையான உணவுகள் என்று 200க்கும் மேற்பட்ட உணவுகளை அங்காடி பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் தயாரித்து கண்காட்சியில் வைத்திருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, ”கிராமப்புறங்களில் பாரம்பரிய உணவுகள் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற நோய்கள் தடுக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் அதிகளவில் பாரம்பரிய உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடுவதால் அதிகளவில் நோய்கள் ஏற்படுகின்றன. அதனால் முடிந்தளவு பாரம்பரிய உணவுகள் சாப்பிடும் வகையில் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்” என கேட்டுக்கொண்டர்.
இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய உணவுகளை தயாரித்த கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.