ஆன்லைன் மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும், பொதுமக்கள் தொடர்ந்து மோசடி கும்பலிடம் ஏமாறும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. அதோடு காவல்துறை அதிகாரியே மோசடி கும்பலிடம் ஏமாந்த சம்பவம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நெல்லையில் நடந்தது.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு சிறப்பு காவல் படையின் கமாண்டன்ட் பணியில் இருப்பவர், கார்த்திகேயன். அவருடைய மொபைல் நம்பருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. டி.ஜி.பி சைலேந்திரபாபு பெயரில் வந்த செய்தியில், `சிறப்பாகப் பணியாற்றும் காவலர்களுக்கு பரிசுக் கூப்பன் வழங்கப்பட இருப்பதால் வாங்கி அனுப்பவும்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அத்துடன், பரிசுக் கூப்பன் வாங்குவதற்கான லிங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை நம்பிய அதிகாரி கார்த்திகேயன், 7.5 லட்சம் ரூபாய் செலுத்தியிருக்கிறார். ஆனால் அவருக்கு பரிசுக் கூப்பன் எதுவும் வராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார்.
தான் ஏமாற்றப்பட்டது குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன், நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. துணிச்சலுடன் காவல்துறை அதிகாரியையே ஏமாற்றிய சம்பவம் பரபரப்பானதால் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்தது. சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்த போலிஸார், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த முரளி (வயது 41) மற்றும் வினய்குமார் (வயது 35) ஆகியோரை கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்திலும் இதே போன்று காவல்துறை அதிகாரியிடம் மோசடி செய்த சம்பவம் நடந்திருக்கிறது. அதில் இருவரை பெங்களூரு போலீஸார் கைது செய்தனர். அவர்களுக்கு நெல்லையில் நடந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கக்கூடும் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில், நெல்லை ,மாவட்ட தனிப்படையினர், நேரில் சென்று விசாரித்தனர். அதில் அங்கு கைது செய்யப்பட்ட மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சன் சோகாசர் (வயது 32) மற்றும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஸ்டான்லி (வயது 40) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். ஆன்லைன் மோசடி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய செல்போன், சிம்கார்டுகள், ஏ.டி.எம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.