நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் உலவி வரும் மக்னா யானை (தந்தம் இல்லாத ஆண் யானை) ஒன்று குடியிருப்புகளை சேதப்படுத்தி அரிசி உள்ளிட்ட தானியங்களை உட்கொண்டு வருகிறது என சொல்லப்படுகிறது. பிஎம் -2 என வனத்துறையால் பெயரிடப்பட்ட அந்த யானை கடந்த 10 மாதத்தில் 45 வீடுகளை இடித்து சேதப்படுத்தியதோடு கடந்த மாதம் இரவில் வீட்டிலிருந்த பெண் ஒருவரை தாக்கியதில், அவர் உயிரிழந்தார். மக்னாவைப் பிடிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வீடுகளை சேதப்படுத்தி வரும் மக்னாவைப் பிடித்து முதுமலை அடர் வனத்துக்குள் விடுவிக்க வனத்துறை உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து, யானையை படிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், புளியம்பாறை கற்குபாளி எனும் வனத்துக்குள் இன்று காலை மக்னா யானை இருப்பதை ட்ரோன் கேமிரா உதவியுடன் கண்டறிந்து பின் தொடர்ந்திருக்கின்றனர். அப்போது செல்லும் வழியில் பெண் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். உடனடியாக பெண்ணின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
இது குறித்து பேசிய வனத்துறையினர், “புளியம்பாறை பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள் வீட்டுக்கு விறகு சேகரிக்க சென்றிருக்கின்றனர். திடீரென இவர்களை யானை ஒன்று விரட்டியிருக்கிறது. இதில் கால்யாணி என்ற 55 வயது பெண் ஒருவர் யானையிடம் சிக்கி உயிரிழந்திருக்கிறார். இவரை தாக்கியது பிஎம்-2 யானையா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. இந்த வனத்தில் வேறு யானையும் இருக்க வாய்ப்பு இருக்கிறது” என்றார்.