பிற்படுத்தப்பட்டோர் கிறிஸ்தவ சிறுபான்மை பிரிவின் கீழ் எம்.பி.பி.எஸ். சீட் ஒதுக்கக்கோரி மாணவி தொடர்ந்த வழக்கில், அரசு தரப்பு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதல் சுற்று மருத்துவ கலந்தாய்வில் பல் மருத்துவத்திற்கான சீட்டு ஒதுக்கப்பட்டது. எம்பிபிஎஸ் படிக்க கனவு என்பதால் 2ஆவது சுற்று கலந்தாய்வில் கலந்து கொண்டேன். முதல் சுற்றில் சீட் ஒதுக்கப்பட்டவர்கள் 2ஆவது சுற்று கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். சீட் ஒதுக்க முடியாது என விதிமுறைகள் உள்ளதாக தெரிவித்தனர். இது சட்டவிரோதமானது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பம்மம் பகுதியை சேர்ந்த ஜிஷிகா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நான் எம்.பி.பி.எஸ். மருத்துவம் படிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. இதை நிறைவேற்றும் வகையில் என்னுடைய படிப்பிற்காக பெற்றோர், சொத்தை அடமானம் வைத்து கடனுக்கு விண்ணப்பித்துள்ளனர். சமீபத்தில் நடந்த நீட் தேர்வை எழுதி, 232 மதிப்பெண்கள் பெற்றேன். நான் பிற்படுத்தப்பட்டோர் கிறிஸ்தவ சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர், அதன்படி எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வில் பங்கேற்றேன்.

image

முதல் சுற்று கலந்தாய்வு பல் மருத்துவம் படிக்க எனக்கு சீட் ஒதுக்கப்பட்டது. ஆனால், என் கனவை நிறைவேற்றும் வகையில் எம்.பி.பி.எஸ். சீட்டுக்காக 2ஆவது சுற்று கலந்தாய்வில் மறுஒதுக்கீடு கோரினேன். அதற்கு மறுப்பு தெரிவித்து, நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் முதல் சுற்று கலந்தாய்வில் சீட் ஒதுக்கப்பட்டவர்கள், 2-ஆவது சுற்று கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் எம்.பி.பி.எஸ். சீட் கேட்க முடியாது என்று விதிமுறைகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2-ஆவது சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற என்னை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் கூட எம்.பி.பி.எஸ். சீட் பெற்றுள்ளனர். எனக்கு மறுப்பதை ஏற்க இயலவில்லை, இது சட்டவிரோதமானது. எனவே, 2ஆவது சுற்று கவுன்சிலிங் மூலம் சீட் ஒதுக்கப்பட்டவர்கள் பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும். எனக்கு எம்.பி.பி.எஸ். சீட் ஒதுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

image

இந்த வழக்கு நீதிபதி பவானிசுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பிற்படுத்தப்பட்டோர் கிறிஸ்தவ சிறுபான்மைப் பிரிவின் கீழ் சுயநிதிப்பிரிவு எம்.பி.பி.எஸ். கல்லூரியில் இடம் ஒதுக்கித்தர உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

image

இதனையடுத்து, பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பிற்கு அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை வருகிற 6-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.