மயானத்திற்கு உரிய பாதையில்லாததால் இடுப்பளவு தண்ணீருக்குள் சடலத்தை தூக்கி செல்வதும், மழை காலங்களில் கழுத்தளவு நீரில் சுமந்துசெல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் சத்திரபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தொண்டமான்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில் இங்கு வசிக்கும் மக்களுக்கான பொது மயானத்திற்கு செல்ல வழி இல்லாத நிலையில், ஆளுயர அளவிற்கு தண்ணீரில் நனைந்தபடி சடலங்களை தூக்கி செல்லும் அவலம் கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாக நிலவிவருகின்றது.
இந்த கிராமத்தின் அருகேயுள்ள கிழுவை மலை பகுதியில் இருந்து வரும் காட்டாற்று வெள்ள நீரானது தொண்டைமான்பட்டி கிராமத்தில் உள்ள பறையன்குளம் கண்மாய்க்கு வந்தடைகிறது. இந்த நீர்வரத்து கால்வாய் பகுதியின் அருகிலயே கிராமத்திற்கு சொந்தமான மயானம் இருப்பதால் கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால் அவர்களது சடலத்தை கொண்டுசெல்ல இடுப்பளவு நீரில் சுமந்து செல்கின்றனர். இதேபோன்று அங்குள்ள பொதுமயானத்திலும் எந்தவித வசதியும் இல்லாத நிலையில் மழைகாலங்களில் உடலை எரிக்க முடியாத அவலம் நீடித்துவருகிறது.
மேலும் மயானத்தின் அருகேயுள்ள வீடுகளுக்கு நாள்தோறும் இடுப்பளவு தண்ணீரில் குடியிருப்பு வாசிகள் செல்லும் நிலையால் நாள்தோறும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இடுப்பளவு தண்ணீர், மலைப்பாம்பு போன்றவை இருப்பதால் உடல்களை தூக்கிசெல்ல யாரும் வருவதற்கு அஞ்சுவதால் உறவினர்கள் மட்டுமே சுமந்துசெல்லும் நிலை உள்ளது.
இதனால் மயானத்திற்கு இறுதிகாரியங்கள் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நாள்தோறும் அந்த வழியில் மலைப்பாம்புகளின் நடமாட்டம் இருப்பதால் மயானத்திற்கு செல்ல பொதுமக்கள் அச்சமடைவதால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 15நாட்களே ஆன குழந்தை மற்றும் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கழுத்தளவு தண்ணீரில் உறவினர்களே உடலை எடுத்துசென்றதாக கி்ராம மக்கள் தெரிவித்தனர்.
இந்த கிராமத்திற்கு தேர்தலின் போது வருகை தந்தவர்கள் மயானத்திற்கு பாதை செய்துதருவதாக கூறிவிட்டு தற்போது கண்டுகொள்ளாத நிலையில் நாள்தோறும் சிரமம் அடைந்துவருகின்றனர் என பொதுமக்கள் குற்றம்சாட்டுக்கின்றனர். இந்த கிராமம் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியின் சொந்த தொகுதிக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மயானத்திற்கு செல்ல தண்ணீரில் முழ்கி செல்லும் நிலை குறித்து மேற்கு ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் உலகநாதனிடம் கேட்ட போது, உரிய ஆய்வு செய்து அது தொடர்பான விவரங்களை கேட்டுள்ளதாகவும், அதன் பிறகு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தெரிவிப்பதாகவும் கூறினார்.