ஜாமீனில் வெளிவருவதற்கான பிணைப் பத்திரம் தாக்கல் செய்யாததால், 22 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டவரை விடுவிக்கும்படி ஜம்மு காஷ்மீர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டில் குற்ற வழக்கு ஒன்றில் ஜெய் பிரகாஷ் என்பவரை ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஜெய் பிரகாஷ்க்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் பிணைப் பத்திரம் அளிக்காததால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அண்மையில் ஜெய் பிரகாஷ்க்கு உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சுதமா பர்ஷத் என்பவர் 30,000 ரூபாய்க்கான பிணை பத்திரம் உத்தரவாதமாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஜெய் பிரகாசை 20 ஆண்டுகளுக்கு பிறகு விடுவித்து ஜம்மு & காஷ்மீர் நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
22 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததற்காக இழப்பீடு வழங்கவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடக் கோரி ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் ஜெய்பிரகாஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், வழக்கு தொடர்பான ஆவணங்களை கீழமை நீதிமன்றத்திலிருந்து கொண்டுவர பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜனவரி 31ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.