பிரபல எழுத்தாளரும், விடுதலை சிறுத்தைக் காட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் தொகுதியின் எம்.பி- யுமான ரவிக்குமார், சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் விழி பா.இதயவேந்தன் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை அளிக்கும் விதமாக, தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அக்கடிதத்தில்,” நாடறிந்த தலித் எழுத்தாளர் விழி பா.இதயவேந்தன் அவர்கள் கடந்த 07.11.2022 அன்று சிறுநீரக செயலிழப்பின் காரணமாக மரணமடைந்தார். விழுப்புரம் நகரில் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் மகனாக 1962ம் ஆண்டு பிறந்த பா.அண்ணாதுரை என்கிற விழி பா.இதயவேந்தன் கல்லூரி மாணவராக இருந்த காலத்திலிருந்தே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தவர். விழுப்புரத்தில் , ‘தென்பெண்ணைக் கலை இலக்கிய கூடல்’ என்ற அமைப்பை நிறுவி செயல்பட்டு வந்த அவர், கவிஞர் த.பழமலய், பேராசிரியர் பா.கல்யாணி முதலானோரின் வழிகாட்டுதலில் ’நெம்புகோல்’ என்னும் கலை இலக்கிய அமைப்பிலும் இணைந்து செயல்பட்டவர்.
சுமார் 40 ஆண்டுகளாக சிறுகதை, கவிதை,நாவல், விமர்சனம் எனப் பல வடிவங்களிலும் மதிக்கத்தக்க படைப்புகளை தமிழுக்கு வழங்கியவர். அவரது எழுத்துகள் இதுவரை 24 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டில் பல்வேறு இலக்கிய அமைப்புகள் வழங்கும் 30 க்கும் மேற்பட்ட விருதுகளை அவர் பெற்றிருக்கிறார். தமிழ்நாட்டின் தலித் இலக்கிய முன்னோடிகளில் ஒருவராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் திகழ்ந்த விழி பா.இதயவேந்தன் அவர்களின் படைப்புகளைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் படித்துப் பயன்பெறும் விதமாக நாட்டுடைமை ஆக்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.