ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் குரூப் 1 தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தார். இவருக்கு ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை பரமக்குடியில் இருந்து அரசுப் பேருந்தில் புறப்பட்டு ராமநாதபுரம் நோக்கி வந்துள்ளார்.

பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தும் அந்த பேருந்தை விட்டுவிட்டால் தேர்வு மையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாது என்பதால் வேறு வழி இன்றி அந்த பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டு ஆபத்தான முறையில் வந்துள்ளார்.

சத்திரக்குடி சுங்கச்சாவடிக்குள் பேருந்து நுழைந்தபோது படிக்கட்டில் தொங்கியப்படி வந்த கோபாலகிருஷ்ணன் அங்கு சாலையில் போடப்பட்டிருந்த பேரிகார்டு மீது மோதி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை

அதனைப் பார்த்து அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் மற்றும் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதனை கேட்டு கோபாலகிருஷ்ணனின் பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் கதறி அழுதனர்.

“இந்த முறை எப்படியாவது பாஸாகிறனும், சாப்பிட்டா லேட்டாக்கிரும்ன்னு சாப்பிடாம கூட ஓடுனியேப்பா, எங்கள விட்டு ஒரேடியா போறதுக்கு தானா.. பரீட்சைக்கு நேராச்சி எழுந்திருப்பா” என கோபாலகிருஷ்ணன் தாய் கதறி அழுதது காண்போர் கண்களையும் குளமாக்கியது.

பின்னர் கோபாலகிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வந்த வாலிபர், விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ராமநாதபுரத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.