கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த கொரட்டகிரி கிராமத்தில், 160-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். குடியிருப்புகளுக்கு அருகே, எட்டு கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்த நிலையில், `குவாரிகள் நடத்துவோர் அரசு உத்தரவுகளைக் காற்றில் பறக்கவிட்டு, இரவு நேரங்களில் வெடிவைப்பதுடன், கிராமத்தின் வழியாக தினமும், 1,200-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கிறது’ என மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் ஓராண்டாகப் புகார் தெரிவித்து வருகின்றனர்.

‘டென்ட்’ அமைத்து போராடிய கிராம மக்கள்.

இந்த நிலையில், கல்குவாரிகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, கடந்த 11-ம் தேதி ஒட்டுமொத்த கிராம மக்களும் கிராமத்தைவிட்டு வெளியேறி, 2 கி.மீ தொலைவிலுள்ள புறம்போக்கு நிலத்தில் ‘டென்ட்’ அமைத்து தங்கி போராட்டம் நடத்தி வந்தனர். 15–ம் தேதி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையிலான அதிகாரிகள், கொரட்டகிரி மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் உடன்பாடு ஏற்படாததால் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (18–ம் தேதி) மாலை, கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ‘இரு குவாரிகள் மட்டுமே செயல்படும், லாரிகள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இனி பாதிப்புகள் இருக்காது’ என மக்களிடம் உறுதியளித்தார். அவரின் வாக்குறுதியை நம்பிய மக்கள், போராட்டத்தை கைவிட்டு எடுத்து வந்த துணி மற்றும் பொருள்களுடன், எட்டு நாள்கள் போராட்டத்துக்குப்பின் மீண்டும் கிராமத்துக்குச் சென்றனர்.

போராட்டத்தை கைவிட்டு கிராமத்துக்கு செல்லும் மக்கள்.

தற்காலிக வெற்றிதான்!

இது குறித்து நம்மிடம் பேசிய மக்கள், ‘‘எட்டு குவாரிகளில், கிராமத்துக்கு தொலைவிலுள்ள இரு குவாரிகளை மட்டும் இயக்குவோம், தண்டறி பகுதி வழியாக மாற்றுப்பாதை அமைத்து லாரிகள் அவ்வழியாக இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இது எங்கள் போராட்டத்துக்கான தற்காலிக வெற்றியாகவே நினைக்கிறோம். குவாரிகளால இனி தொல்லை இருக்காதுனு நம்புறோம். மீண்டும் குவாரிகளால் எங்கள் வாழ்வாதாரம் பாதித்தால், உறுதியாக பெரும் அளவில் போராட்டம் நடத்துவோம். மீண்டும் போராட்டக் களத்துக்கு நாங்கள் வராமல் இருப்பது, அதிகாரிகள் மற்றும் குவாரி உரிமையாளர்கள் கைகளில்தான் உள்ளது” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.