தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள ஆனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவரின் மகன், கலையரசன். 27 வயது நிரம்பிய அவர் கடையநல்லூர் பகுதியில் உள்ள வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 7-ம் தேதிதான் திருமணம் நடைபெற்றது, இவர் விபத்து ஒன்றில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிப் பணிக்காக நேற்று (14-ம் தேதி) கலையரசன் தனது பைக்கில் புறப்பட்டுச் சென்றுள்ளார். சுரண்டை-சாம்பவர் வடகரை சாலையில் அவர் சென்றுகொண்டிருந்தபோது எதிரில் மூர்த்தி என்பவர் மொபெட்டில் வந்துள்ளார். எதிர்பாராதவிதமாக இரு வாகனங்களும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. அதில், கலையரசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
காயமடைந்த கலையரசனை ஆம்புலன்ஸ் மூலம் சுரண்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு முதலுதவி செய்யப்பட்ட பின்னர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கலையரசனின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லை மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (15-ம் தேதி) உயிரிழந்தார். மணமான ஒரு வார காலத்தில் புதுமாப்பிள்ளை, சாலை விபத்து காரணமாக பலியான சம்பவத்தால் உறவினர்கள் மிகுந்த துயரத்துக்கு உள்ளானார்கள். விபத்து காரணமாக உயிரிழந்த கலையரசனின் கிராமமே சோகத்தில் மூழ்கியது.