பல ஆண்டுகளாகவே, தைவான் நாட்டுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது சீனா. விரைவில் அந்நாட்டின் மீது போர் தொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் தொடக்கம் எப்போது என்பதைப் பார்க்கலாம்.

சீனாவில்  1890-களில் நடத்தப்பட்ட போராட்டங்களில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டது. பிறகு, சீன தேசிய கட்சி 1911-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. இதனிடையில் 1927-ல் ஆளும் கட்சிக்கு எதிராக சீன கம்யூனிஸ்ட் கட்சிகள் கலகத்தில் ஈடுபட்டனர். சுமார் 22 ஆண்டுகளாக இரு கட்சிகளுக்கும் இடையில் போர் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. தேசிய கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்களும் அதன் ஆதரவாளர்களும் உயிருக்கு அஞ்சி தென் சீன கடலில் உள்ள தீவுப் பகுதியான தைவானுக்கு குடியேறினர். அப்போது தைவனை அவர்களாகவே சுதந்திர நாடாகவும் அறிவித்துக் கொண்டனர்.  இதை தொடக்கம் முதலே ஏற்காத சீனா தைவானை தன்னுடன் சேர்க்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து எடுத்து வந்தது.

சீனா – தைவான் போர்

 தைவானை சீனாவுடன் சேர்க்க அந்நாட்டுடன் மோதல் போக்கைக் கையாண்ட சீனாவை மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் விமர்சித்து வந்தனர். மேலும் தைவானுக்கு  ஆதரவாகவும் பேசி வந்தனர். இதனால் அவர்கள் எதிர்த்து சீனாவால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையை இருந்தது. ஆனால் சமீப காலமாக சீனாவுடன் தைவனை இணைத்தே ஆகவேண்டும் என்கிற முடிவுக்கு வந்துள்ளார் நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்.

ரஷ்யா – உக்ரைன் போர்

அதற்கு காரணம் என்ன?

 இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது உக்ரைன் ரஷ்யாவின் போர் தான். உக்ரைன் நேட்டோவில் இணைவதை தடுப்பதற்கும் உக்ரைனை தங்கள் நாட்டுடன் இணைக்கவும் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்திருப்பதை முன்னுதாரணமாக கொண்டு சீன அரசும் தைவான் மீது போர் தொடுக்க  திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  எனினும் அமெரிக்கா இங்கிலாந்து போன்றவைகள் தைவானுக்கு துணையாக இருக்கும் நிலையில் சீனா போரை எப்படி தொடங்கும் என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

அமெரிக்க சபாநாயகரின் வருகை!

கடந்தமுறை இணைய வழியாக நடந்த பேச்சுவார்த்தையின் போது, தைவானுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கஅதிபரிடம், `நெருப்புடன் விளையாட வேண்டாம்’ என கூறினார் சீன அதிபர். அந்த சூழலில், அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு பயணம் செய்தது  இருதரப்பு உறவை மேலும் சீர்குலைத்ததாக குற்றம் சாட்டினார்.

பெலோசியின் வருகைக்குப் பதிலடியாக, பெய்ஜிங் தைவானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்தது. மேலும்  தீவைச் சுற்றி நேரடி துப்பாக்கிச் சூடு மற்றும்  இராணுவப் பயிற்சிகளைத் தொடங்கியது. இதனை தைவான் பாதுகாப்பு அதிகாரிகள் ஆத்திரமூட்டும் செயல் என விமர்சித்தனர்.

நான்சி பெலோசி

மேலும் கோபத்தில் ஜி ஜின்பிங்…

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பலோசி தைவானில் அண்மையில் மேற்கொண்ட பயணம் சீனாவை சீண்டிப் பார்க்கும் நடவடிக்கையாகவே  பார்க்கப்பட்டது.  இதற்கு ஜின்பிங் உடனே எதிர்வினையும் ஆற்றினார். “சிங்கத்தின் அமைதியை அலட்சியப்படுத்த வேண்டாம்” என்றார்.

அமெரிக்காவின் நிலைப்பாடு இவ்வாறு இருக்க, புதிதாக இங்கிலாந்தின் பிரதமராக பதவி ஏற்றிருக்கும் ரிஷி சுனக்கும் தைவானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார். இது சீனாவின் பொறுமையை மீண்டும் சோதித்தது. இந்நிலையில் தான், சீன ராணுவ தலைமையகத்திற்கு அதிரடியாக வந்த ஜி ஜின்பின் போருக்கு முழு வீச்சில் தயாராகுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். ஒட்டுமொத்த ராணுவமும் முழு ஆற்றலுடனும் அர்ப்பணித்து போருக்கு தயாராக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

சீன இராணுவம்

குறிப்பாக அதிபர் ஜி ஜின்பிங் இந்த உத்தரவைப் பிறப்பிக்கும் போது எந்த நாட்டுக்கு எதிராக போர் தொடுக்க போகிறார் என்பதை குறிப்பிடவில்லை. ஆனாலும் தைவான் மீது தான் சீனா போர் தொடுக்க உள்ளதாக அந்நாட்டில் இருந்து தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது.

ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை

இந்தோனேஷியாவில் பாலி நகரில் ஜி20 மாநாடு நடக்கவிருக்கிறது. இதில் பங்கேற்பதற்கு முன்னதாக, வரும்  திங்கள்  சீன அதிபர் ஜி ஜின்பிங் – அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் சந்தித்து பேசவுள்ளனர். ஆனால் இதை சீன தரப்பிலிருந்து உறுதி செய்யப்படவில்லை. ஆனால் இந்த சந்திப்பை வெள்ளை மாளிகை உறுதி செய்திருக்கிறது.  தைவான் மீது கடைப்பிடிக்கும் பொருளாதார நடைமுறைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா பேசவிருப்பதாக அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பைடன் – ஜி ஜின்பிங்

தைவானின் எதிர்ப்பார்ப்பு என்ன?

தைவான் வெளியுறவு மந்திரி ஜோசப் வூ, கடந்த வியாழன் அன்று அளித்த பேட்டி ஒன்றில், சீன- அமெரிக்க தலைவர்களின் சந்திப்பை வரவேற்பதாகக் கூறினார். இது தொடர்பாக பேசிய அவர், “சீனா தைவானை இராணுவ ரீதியாக அச்சுறுத்துகிறது. மேலும் சர்வதேச அளவில் தைவானை தனிமைப்படுத்த முயற்சி செய்கிறது. சீன நாடு தைவானின் பேச்சுவார்த்தை நடத்த மறுக்கிறது. எனவே, தைவானுக்கும் சீனாவிற்கும் இடையிலான வேறுபாடுகளை தீர்ப்பது மற்றும்  அமைதிக்கான சூழலை உருவாக்க  சர்வதேச தலைவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்” என்றார்.

தைவான்

அமைதி  மட்டுமே தைவானின் வேண்டுகோளாக இருக்கும் நிலையில், சீனாவின் மோதல் போக்கு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது. இந்த மோதல் போக்கை கைவிடவும் போர் ஏற்படாமல் இருக்க இந்த இருநாட்டு தலைவர்கள் சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. எனவே பேச்சுவார்த்தை உறுதியாகி அதில் நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.