நடப்பு டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்பவே இந்திய அணியும் குரூப் சுற்றில் அசத்தலாக விளையாடி அரையிறுதிக்குள் நுழைந்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 168 ரன்கள் எடுக்க, பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து 16 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் 49 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். 3 சிக்ஸர், 9 பவுண்டரிகள் விளாசி இருந்தார். ஆனால், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 28 பந்துகளை சந்தித்து வெறும் 27 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்திய அணியின் தோல்விக்கு அவரது சொதப்பலான ஆட்டமும் ஒருவகையில் காரணம்தான். 20 பந்துகளுக்கு மேல் செட்டில் ஆன பின்னர் ஆட்டமிழப்பது அணிக்கு பின்னடைவுதான். இந்நிலையில், இன்றையப் போட்டிக்கு பின்னும், போட்டிக்கு முன்பாக நேற்றும் ரோகித் சர்மா அளித்த பேட்டியினை தற்போது காணலாம்.
போட்டிக்கு பின்னர் பேசிய ரோகித் சர்மா, ”இன்றையப் போட்டி இப்படி முடிந்ததில் உண்மையிலே அதிக வருத்தம்தான். நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம். கடைசி நேர ஆட்டத்தால் சிறப்பான ஸ்கோர் எட்டினோம். ஆனால், பந்துவீச்சில் நினைத்தபடி நடக்கவில்லை. இன்றையப் போட்டியை எங்களுக்கானதாக மாற்ற முடியவில்லை. இதற்கெல்லாம் முக்கியமான காரணம் நாக் அவுட் போட்டிகளில் எழும் அழுத்தம்தான். இந்த அழுத்தத்தை புரிந்து கொண்டுதான் வீரர்கள் விளையாடினர். ஐபிஎல் போட்டிகளில் இத்தகைய அழுத்தத்தில் நம் வீரர்கள் விளையாடி இருக்கிறார்கள்.
நாங்கள் பதற்றத்துடந்தான் ஆட்டத்தை தொடங்கினோம். ஆனால், உண்மையில் இங்கிலாந்து அணியின் ஓபனர்களை பாராட்ட வேண்டும். அவர் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். முதல் ஓவரில் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனது. ஆனால், சரியான லெத்தில் வீசப்படவில்லை. வங்கதேச அணிக்கு எதிராக போட்டி மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது. 9 ஓவர்களில் 85 ரன்களை கட்டுப்படுத்துவது சிரமம் என்றுதான் நினைத்தோம். ஆனால், நாம் திட்டமிட்ட பிளான்களை செயல்படுத்தினோம். ஆனால், இன்றையப் போட்டியில் எங்கள் திட்டங்கள் சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை” என்றார்.
முன்னதாக, நேற்றைய பேட்டியில், “ஒரு நாக் அவுட் போட்டியின் வெற்றி தோல்வியை வைத்து ஒரு அணியின் பலத்தை தீர்மானிக்க முடியாது. கடந்த பல தொடர்களில் நாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளோம். நாக் அவுட் போட்டிகள் எவ்வளவு முக்கியமானது என்பது எனக்கு தெரியும். அதற்கு எவ்வளவு நம்பிக்கை அவசியம் என்பதும் தெரியும். ஆனால், கடந்த காலங்களில் நாம் செய்ததை மறந்துவிடக்கூடாது என்பதைத்தான் நான் வலியுறுத்துகிறேன்” என்று ரோகித் சர்மா கூறியிருந்தார்.