ஒடிசாவின் கியோஞ்சார் மாவட்டம், ஷிலிபாடா முந்திரி காடு அருகே வசிக்கும் கிராம மக்கள், இலுப்பை மரத்தின் பூக்களை புளிக்க வைத்து உருவாக்கப்படும் மஹுவா (Mahua) மதுபானம் தயாரிக்க வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.
இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள பழங்குடியின ஆண்கள் மற்றும் பெண்களும், பாரம்பர்யமாக இந்த மதுபானத்தை தயாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், வனப்பகுதியில் இலுப்பைப் பூக்களை பெரிய பானைகள் சிலவற்றில் தண்ணீரில் ஊறவைத்து விட்டு சென்றுள்ளனர். ஆனால் மறுநாள் காலை 6 மணிக்கு மஹுவா (Mahua) மதுபானத்தை தயாரிக்க வனத்திற்குள் சென்றபோது, அங்கே பானைகள் உடைந்திருந்ததை கண்டிருக்கிறார்கள்.
அதன் அருகிலேயே யானைகள் படுத்து உறங்கிக் கொண்டு இருந்ததுள்ளது. இவை இலுப்பைப் பூக்கள் ஊறவைக்கப்பட்ட மதுவை குடித்ததால் இப்படி உறங்கி உள்ளது என்று கூறுகின்றனர்.
மொத்தம் 9 ஆண் யானைகள், 6 பெண் யானைகள், 9 குட்டி யானைகள் இருப்பதை கிராமவாசிகள் பார்த்துள்ளனர். அவர்கள் யானைகளை எழுப்ப முயற்சி செய்தும், எழுப்ப முடியவில்லை என்பதால் வனத்துறை அதிகாரிகளுக்கு செய்தியை தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகு அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் மேளம் அடித்து யானைகளை காட்டிற்குள் அனுப்பி வைத்தனர். சுமார் 10 மணியளவில் யானைகள் காட்டிற்குள் சென்றன.
வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், “யானைகள் புளிக்கவைக்கப்பட்ட மஹுவாவை குடித்ததால் உறங்கியது என்பதை உறுதியாக கூற முடியாது. அவை அங்கே இளைப்பாற கூட வந்திருக்கலாம்” என தெரிவித்துள்ளனர்.
ஆனால் யானைகள் அந்த பானைகளுக்கு அருகிலேயே தூங்கி உள்ளது. எனவே அவை கண்டிப்பாக அந்த மதுவை அருந்தி இருக்க வேண்டும் என்று கிராம வாசிகள் கூறியுள்ளனர்.