இமாச்சலப் பிரதேசம், குஜராத் என அடுத்தடுத்து சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர்-12, டிசம்பர்-1 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இதில் இமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க-வும், காங்கிரஸும் மாறிமாறி ஆட்சிக்கு வந்திருந்தாலும், குஜராத்தில் தொடர்ச்சியாக 27 ஆண்டுகளாக பா.ஜ.க மட்டுமே ஆட்சி செய்துவருகிறது. இதனால், காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய இரண்டு கட்சிகளும் குஜராத்தில் ஆட்சியைக் கைப்பற்ற முனைப்புக்காட்டி வருகின்றன.
குஜராத் தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் சார்பாக 10 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த மோகன்சிங் ரத்வா(78), திடீரென கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் சேர முடிவுசெய்திருப்பது காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உதய்பூர் மாவட்டத்திலுள்ள பாவி-ஜெட்பூர் (எஸ்.டி) தொகுதி எம்.எல்.ஏ-வான இவர் அங்குள்ள பழங்குடியினர் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இந்தமுறை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என முன்னதாகவே கூறியிருந்த மோகன்சிங் ரத்வா, தனது தொகுதியில் தன்னுடைய மகன் போட்டியிட விரும்புவதாகக் கூறியிருந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மோகன்சிங் ரத்வா, “எனக்கு இப்போது வயதாகிவிட்டது. என் மகன் ராஜேந்திரசிங் ஒரு பொறியாளர். அவனுக்கு நாங்கள் பா.ஜ.க-வில் சேர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது” எனத் தெரிவித்தார்.
மேலும், தன் மகனுக்கு சீட் கொடுக்காததால்தான் காங்கிரஸிலிருந்து விலகினார் என்பதை மறுத்த மோகன்சிங் ரத்வா, “என் மகனுக்கு சீட்டு கொடுக்க மாட்டோம் என்று காங்கிரஸ் ஒருபோதும் கூறவில்லை. காங்கிரஸ் எதையும் கூறுவதற்கு முன்பே நான் முடிவு செய்தேன். மேலும், நமது பழங்குடியினப் பகுதிகளில் பா.ஜ.க அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் செய்த பணிகளால் நான் ஈர்க்கப்பட்டேன். அதனால் நான் பா.ஜ.க-வில் சேர முடிவு செய்தேன்” எனக் கூறினார்.