ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரான காலம் சென்ற எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மனைவியும், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் அவர்களின் தாயாருமான திருமதி.சரோஜா பாலசுப்ரமணியன் (86), இன்று ஞாயிற்றுக்கிழமை 2022, நவம்பர் 6-ம் தேதி காலை 07.30 மணிக்கு இயற்கை எய்தினார். அவரின் மறைக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் திரு.சீனிவாசன் அவர்களின் தாயாரும், பாலசுப்ரமணியன் அவர்களின் துணைவியாருமான திருமதி. சரோஜா பாலசுப்ரமணியன் அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார் என்றறிந்து வேதனை அடைந்தேன். அன்பு அன்னையை இழந்து தவிக்கும் திரு.சீனிவாசன் அவர்களுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,”விகடன் குழும தலைவர், திரு.சீனிவாசன் அவர்களின் தாயார் திருமதி.சரோஜா பாலசுப்ரமணியன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் , விகடன் குழுமத்திற்கும் அ.தி.மு.க சார்பாக எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்