உலகளாவிய தமிழ் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா மலேசியாவில் உள்ள பிரிக் ஃபீல்ட்ஸ் கலா மண்டபத்தில் கடந்த அக்டோபர் 14ந் தேதி வெள்ளிக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது. குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ் மொழி வாழ்த்துகளுடன் விழா தொடங்குகியது.
இதில் மலேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீசரவணன், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர், கயல் அக்ரோ ஃபுட்ஸ் உரிமையாளர் கதிரேசன், நவீனா சந்தோஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
பள்ளியின் இணை இயக்குநர் ராதிகா ஹரிஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். குழந்தைகளின் கலாச்சார பல்சுவை நிகழ்ச்சிகள் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தது.
மதிப்பிற்குரிய அமைச்சர் சரவணன், ராஜா, பாரதி பாஸ்கர் ஆகியோரது வெகு சிறப்பான உரைகளைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களையும் புரவலர்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
கலகலப்பான கேள்வி பதில் உரையாடலும் முக்கிய இடம் பெற்றது. அதன் பிறகு குழந்தைகளின் பதக்கங்கள் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நன்றியுரையுடன் விழா இனிதே சிறப்பாக நிறைவு பெற்றது.