தீபாவளிக்கு முதல் நாள் பிரதோஷ தரிசனம் செய்வது மிகவும் விசேஷம் என்கிறது ஒரு புராணக் கதை. அதேபோல் அந்த தினத்தில் யமதீபம் ஏற்றி வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடுமாம்; இந்த வழிபாட்டையும் தீபாவளி விரதம் குறித்தும் விரிவாக விளக்கியுள்ளார் முனிவர் ஒருவர்! அவர் யார் தெரியுமா?
புராணங்கள் சொல்லும் தீபாவளிப் பிரதோஷம்!
தீர்க்கதமஸ் என்ற முனிவர் இருந்தார். ஒருமுறை, இவரது ஆசிரமத்துக்கு சனாதன முனிவர் விஜயம் செய்தார். அவரை வரவேற்று பாத பூஜை செய்து, உணவளித்த தீர்க்கதமஸ் தனக்கு ஒரு நல்ல மார்க்கத்தைக் கூறுமாறு அப்போது வேண்டினார்.
‘‘தீர்க்கதமஸ்… துன்ப இருளை அகற்றி வாழ்வில் இன்ப ஒளி யேற்றும் ஒரு விரதம் உண்டு. அதைக் கடைப் பிடித்தால் எல்லாம் நலமாகும். எவரும் மிக எளிமையாகக் கடைப்பிடிக்கக் கூடியது இந்த விரதம்’’ என்ற சனாதன முனிவர் அந்த வழிபாடு குறித்து விளக்கினார். அந்த விவரம் இதுதான்….
துலா மாதம் தேய்பிறை திரயோதசி அன்று (தீபாவளிக்கு முதல் நாள்) மகா பிரதோஷ பூஜை செய்து, யம தீபம் ஏற்றி யம தேவனை வழிபட வேண்டும். இதனால் நமது வாழ்வு நலம் பெறுவதோடு, நரகத்தில் உழலும் நம் முன்னோர் சொர்க்கம் செல்லவும் வழி பிறக்கும். முன்னோர்களது ஆசியும் கிடைக்கும்.
மறு நாள் நரக சதுர்த்தசி (தீபாவளி) அன்று உஷத் காலத்தில் அதாவது உதய காலத்துக்கு முன் எண்ணெய் (எள் நெய்) தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும்.
இந்தப் புனிதமான நாளில் எண்ணெயில் திருமகளும், அரப்புப் பொடியில் கலைமகளும், சந்தனத்தில் நிலமகளும், குங்குமத்தில் கௌரியும், மலர்களில் மோகினிகளும், நீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், தீபத்தில் பரமாத்மாவும் உறைந்து, அருள்பாலிக்கிறார்கள்.
எனவே, இந்த நல்ல நாளில் எண்ணெய் தேய்த்து, அரப்புத் தூள் உபயோகித்து, வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும்! இதனால் கங்கையில் ஸ்நானம் செய்த பலன் சேரும். பிறகு புத்தாடை உடுத்தி, தீபம் ஏற்றி, இனிப்பு பட்சணங்கள் படைத்து இறை வழிபாடு செய்ய வேண்டும். இதுவே தீபாவளி விரதமாகும். இதைக் கடைப்பிடிப்பதால் எல்லா விதமான இடையூறுகளும் நீங்கும். இயற்கை ஒத்துழைக்கும். வழிபாடும் தவமும் தடையின்றி நடைபெறும். நற்கதி உண்டாகும். இந்தத் தீபாவளி விரத வழிபாட்டை ஆண்டுதோறும் கடைப் பிடிப்பதன் மூலம், தோஷங்கள் விலகி நிம்மதியும் மகிழ்ச்சியும் கொண்ட வாழ்க்கை அமையும்! நாமும் இந்த முறைப்படி விரத வழிபாடுகளைக் கடைப்பிடித்து இறையருள் பெறுவோம்.
புத்தாடை அணியும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
‘தீப தேவி மகா சக்தீ சுபம் பவது மே சதா
ஓம் நமோ நாராயணாய வாசுதேவாய
ஓம் நமசிவாய’
இந்த ஸ்லோகத்தை, தீபாவளியன்று புத்தாடை அணியும்போது மூன்று முறை சொல்லி வழிபட வேண்டும். இதனால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.
தீபம் ஏற்றும்போது சொல்லவேண்டிய ஸ்லோகம்
ஸுவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரீ
ஸுதான்ய வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரீ
கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரீ ’
– இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடலாம். அல்லது
பொன்பொருள் பெருகட்டும் தீபம் போற்றி தானியம் செழிக்கட்டும் தீபம் போற்றி மங்கலம் பெருகட்டும் தீபலட்சுமியே போற்றி
என்று துதித்தபடி தீபங்கள் ஏற்றி வழிபடலாம். இதனால் வீட்டில் பொன்பொருள் பெருகும், தான்யங்கள் விருத்தியாகும், சர்வ மங்கலங்களும் உண்டகும்.