மகாராஷ்டிராவின் கட்சிரோலி, பண்டாரா, சந்திராப்பூர் பகுதியில் புலி ஒன்று மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தது. கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இது வரை 13 பேரை கடித்து கொன்றிருந்தது. இதனால் அந்த புலி எங்கு நடமாடினாலும் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர்.
அந்த புலியின் உடம்பில் வனத்துறையினர் சிப் ஒன்றை வைத்திருந்தனர். இதனால் அதன் நடமாட்டத்தை வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தொடர்ந்து அந்த புலியால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்ததால் அதனை பிடிப்பது குறித்து கடந்த 4ம் தேதி வனத்துறை அதிகாரிகள் கூடி கலந்து ஆலோசித்தனர். இதில் நாக்பூர் முதன்மை தலைமை வனத்துறை அதிகாரி கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சந்திராப்பூர் மற்றும் ததோபா விலங்குகள் சரணாலய ஊழியர்கள் இணைந்து அதனை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நேற்று காலையில் அந்த புலியை வனத்துறை ஊழியர்கள் வெற்றிகரமாக பிடித்தனர். அதனை நாக்பூரில் உள்ள விலங்குகள் மீட்பு மையத்திற்கு ஊழியர்கள் கொண்டு சென்றனர். அங்கு சில மாதங்கள் முகாம்களில் அடைத்து வைக்க முடிவு செய்துள்ளனர். இந்த புலி வட்சாவில் 6 பேரையும், பண்டாராவில் 4 பேரையும், சந்திராப்பூர் பிரம்பபுரி வனப்பகுதியில் 3 பேரையும் கடித்து கொன்றுள்ளது. இந்த புலி தனது குட்டிகளை பாதுகாக்கவோ அல்லது தன்னை பாதுகாத்துக்கொள்ளவோ மனிதர்களை தாக்கக்கூடியது என்று வனத்துறை ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த புலி பிடிபட்டு இருப்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். விதர்பாவில் கட்சிரோலி, பண்டாரா, கோண்டியா, சந்திராப்பூர் பகுதி அடர்ந்த வனப்பகுதியை கொண்டது.