காங்கிரஸில் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் சோனியா காந்தி குடும்பத்திலிருந்து யாரும் போட்டியிடாததையடுத்து இருமுனைப் போட்டியாக, காங்கிரஸ் எம்.பி சசி தரூர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தற்போது தேர்தலில் இருக்கின்றனர். தேர்தலுக்கு இன்னும் 9 நாள்களே இருக்கும் நிலையில், கட்சியில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மூத்த தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் கட்சியில் தொண்டர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று கூறிவரும் சசி தரூர், “மல்லிகார்ஜுன கார்கேவால் கட்சியில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது” என்று கூறியிருந்தது பேசுபொருளாகியிருந்தது. அதன் தொடர்ச்சியாக, தேர்தலிலிருந்து சசி தரூர் விலகவேண்டும் என்று கட்சியிலேயே சில எதிர்ப்புகளும் கிளம்பின. அதோடு, தேர்தலிலிருந்து சசி தரூர் விலகுவதாகப் பேச்சுகளும் அடிப்பட்டன.
இந்த நிலையில் சசி தரூர், வீடியோ ஒன்றில் இது குறித்து விளக்கமளித்திருக்கிறார். ட்விட்டரில் இன்று பதிவிடப்பட்ட அந்த வீடியோவில், “நான் இன்று விலகுகிறேன் என்பதாக டெல்லி வட்டாரங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இந்த சவாலிலிருந்து நான் விலக மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். என் வாழ்நாளில் ஒருபோதும் நான் அப்படி இருந்ததில்லை. அப்படியிருக்கவும் மாட்டேன். இதுவொரு போராட்டம். மேலும், இது கட்சிக்குள் ஒரு நட்புரீதியான போட்டி. 17-ம் தேதி வருகை தந்து எனக்கு வாக்களியுங்கள்” என சசி தரூர் பேசியிருக்கிறார்.