ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கியுள்ளார். அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீர் டிஜிபி கொலையில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் நேற்றைய தினம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சிறைத்துறை டிஜிபி லோகியா அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இதனை அடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு என்பது போடப்பட்டிருந்தது.
பெட்ரோல் நிலையத்தில் பேருந்து வெடிகுண்டு தாக்குதல் மற்றும் எல்லை பகுதிகளில் தொடர்ந்து தீவிரவாதிகள் ஊடுருவல் என பதற்ற நிலை நீடித்து வந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பயண மேற்கொள்ள உள்ள ரெஜோரி உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் இணையதள சேவை என்பது தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையில் சிறைத்துறை டிஜிபி லோகியா கொலையில் அவரது வீட்டு பணியாளரான யாசிர் அகமது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் யாசிர் அகமது இருந்ததாகவும், கடந்து சில நாட்களாக அவரது நண்பர் வீட்டில் தங்கி இருந்த அவர் நேற்று இரவு தான் லோகியாவின் வீட்டிற்கு வந்து வேலைகளை செய்துள்ளார். பிறகு திடீரென லோகியா தங்கியிருந்த அறைக்குள் புகுந்த அவர் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் யாசிர் அகமது இடம் தொடர்ந்து விசாரணை என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் ஜம்மு காஷ்மீரில் தனது இரண்டு நாள் பயணத்தை தொடங்கிய அமித்ஷா இன்று காலை வைஷ்ணவி தேவி, கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அதன் பிறகு ரெஜோரி மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் கடந்த 70 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்று குடும்பங்கள் மட்டுமே ஆட்சி செய்து உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து ஜனநாயகம் என்ற வார்த்தையின் அர்த்தத்தையே இந்த மூன்று குடும்பங்களும் அகற்றி விட்டன என அமித்ஷா குற்றம் சாட்டினார்.
370 பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் இட ஒதுக்கீடு முறையினை அமல்படுத்துவதற்கான தடை நீங்கி இருப்பதாகவும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குஜ்ஜர் பகரி உள்ளிட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட குழு தங்களது அறிக்கையை சமர்ப்பித்து இருப்பதாகவும் அதன் அடிப்படையில் விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் பேசினார்.
மேலும் ‘’கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 56 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு என்பது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வந்திருப்பதாகவும் ஸ்ரீ நகரிலிருந்து சர்வதேச விமான போக்குவரத்து தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை 70 ஆண்டுகளில் தற்பொழுது தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் பொழுது நான்காயிரம் தீவிரவாத செயல்கள் பதிவான நிலையில் 2019 ஆம் ஆண்டிலிருந்து வெறும் 721 தீவிரவாத செயல்கள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. இப்பொழுதெல்லாம் ஜம்மு காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் என்பது நடப்பதில்லை. இளைஞர்கள் கையில் கற்களை வைத்திருப்பதற்கு பதிலாக புத்தகங்களையும் லேப்டாப்புகளையும் வைத்திருக்கிறார்கள்” எனப் பேசினார்.
– நிரஞசன் குமார்