228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றது. இந்நிலையில், இன்று இந்தூரில் நடந்துவரும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. கேஎல் ராகுல், விராட் கோலி, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டனர்.
முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டெம்பா பவுமா வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். அதைத்தொடர்ந்து டி காக் மற்றும் ரைலீ ரூசோ ஆகிய இருவரும் அடித்து ஆடினர். இந்திய பவுலிங்கை பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அடித்து நொறுக்கினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த குயிண்டன் டி காக் 43 பந்தில் 68 ரன்களை குவித்து ரன் அவுட்டாகி வெளியேறினார். டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் சிக்ஸர் மழை பொழிந்த ரைலீ ரூசோ 48 பந்தில் சதமடித்து அசத்தினார். இது சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அவரின் முதல் சதமாகும். 48 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 100 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார் ரூசோ.
டேவிட் மில்லர் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி ஃபினிஷிங் கொடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 227 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்க அணி. இந்திய அணியின் தரப்பில் உமேஷ், தீபக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும், ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேற, இதையடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இருவரும் தத்தம் எதிர்கொண்ட பந்துகளை நாலாப்புறமும் சிதறடிக்க ஸ்கோர் விறுவிறுவென எகிறியது. பவர்பிளே முடிவதற்குள் 64 ரன்களை குவித்தது இந்திய அணி. ஆனால் 27 ரன்களில் ரிஷப் பண்டும், 46 ரன்களில் தினேஷ் கார்த்திக்கும் தங்கள் விக்கெடுகளை பறிகொடுக்க, மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்டது இந்திய அணி. இதையடுத்து இந்திய அணியை படுதோல்வியில் இருந்து காக்கும் பணியில் அக்சர் படேலும் அஸ்வினும் ஈடுபட்டு வருகின்றனர்.