திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதப்பாட முதுகலை ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் சாந்திப்பிரியா. மாணவி ஒருவரிடம் தீண்டாமை உணர்வுடன் நடந்து கொண்டதாகவும், வேதியியல் ஆய்வகத்தில் அமிலக் குடுவைகளின் அருகில் தனியாக அமர வைத்ததாகவும், பாடம் நடத்தாமல் குடும்ப விஷயங்களை பேசுவதாகவும் அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது.
அதேபோல மாணவி ஒருவரை `மருமகளே’ என்று அழைத்ததுடன், அவர் மகனிடம் பேசச் சொல்லி அவரைக் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், இரவு நேரத்தில் மாணவிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பாட விஷயமாக பேச வேண்டும் என்று கூறிவிட்டு, பாடம் தவிர்த்து மற்ற விஷயங்களைப் பேசிவந்ததாகச் சொல்லப்படுகிறது.
அழைப்பை ஏற்க மறுக்கும் மாணவிகளிடம், `தேர்வு மதிப்பெண்களில் கைவைப்பேன்’ என்று மிரட்டியிருக்கிறார். அத்துடன் மாணவிகள் தன்னுடைய காலில் விழுந்து `பிளீஸ்’ என்று கெஞ்சினால்தான் பாடம் நடத்துவேன் என்றும் கூறியிருக்கிறார்.
இதன் உச்சகட்டமாக மாணவிகள் ஒவ்வொரு நாள் தூங்கும்போதும் அந்த ஆசிரியையின் கணவரை நினைத்துக் கொண்டுதான் தூங்க வேண்டும் என்று கூறியதாக சாந்திப்பிரியாமீது அடுக்கடுக்கான புகார்கள் கல்வித் துறைக்குச் சென்றன.
இவரின் நடவடிக்கையால் பள்ளியின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதுடன் பள்ளியில் அசாதாரண சூழல் ஏற்படுவதாக ஆசிரியர்களும் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், பள்ளியில் தனது சாதியைக் காரணம்காட்டி சக ஆசிரியர்கள் தன்னை வன்கொடுமை செய்ததாக சாந்திப்பிரியா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி கூறுகையில், “ஆசிரியை சாந்திப்பிரியாமீது ஏற்கெனவே பல புகார்கள் உள்ளன. ஜல்லிபட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பள்ளியில் பணியாற்றியபோது, தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்திருக்கிறார். சக ஆசிரியர், மாணவர்களை செல்போனில் புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார்.
ஒரு மாணவியை `மருமகளே’ என அழைத்ததுடன், தன் மகனிடம் செல்போனில் பேசச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார். இதனால், அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அந்த மாணவியிடம் பேசிய ஆடியோ ரெக்காட் வைத்து இதை உறுதி செய்திருக்கிறோம். தன் கணவரை நினைத்துக் கொண்டுதான் தூங்க வேண்டும் என்று கூறியதும் விசாரணையில் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், தன்னை சாதிரீதியாக சக ஆசிரியர்கள் தீண்டாமையைப் பின்பற்றுவதாக சாந்திப்பிரியா போலீஸில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால் அவரை பணிநீக்கம் செய்யாமல் வேறு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்திருக்கிறோம். விசாரணை அனைத்தும் முடிவுற்ற பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”